பெண் ஊழியரை டிஸ்மிஸ் செய்த உத்தரவை வாபஸ் பெற்றது டி.சி.எஸ்.
சென்னை: சென்னையைச் சேர்ந்த பெண் ஊழியரை பணி நீக்கம் செய்த உத்தரவை டி.சி.எஸ். நிறுவனம் வாபஸ் பெற்றுள்ளது.
சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த எம்.சி.ஏ. பட்டதாரியான சசிரேகா டி.சி.எஸ். நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அவரை பணி நீக்கம் செய்து கடந்த மாதம் 22ம் தேதி உததரவு வழங்கப்பட்டது. இதையடுத்து அவர் கடந்த வாரம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
எம்.சி.ஏ. பட்டதாரியான நான், கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை 3 தனியார் சாப்ட்வேர் நிறுவனங்களில் பணியாற்றினேன். அதன் பின்ன, கடந்த 2011 ஆம் ஆண்டு மார்ச் 25 ஆம் தேதி சென்னையில் உள்ள டாட்டா கன்சல்டென்சி சர்வீஸ் லிமிட்டெட் (டி.சி.எஸ்) நிறுவனத்தில் என்ஜினீயராக பணியில் சேர்ந்தேன். என்னுடைய தகுதிகளை பரிசீலித்த பின்னரே, எனக்கு பணி நியமன உத்தரவினை அந்த நிறுவனம் வழங்கியது. மேலும் என்னுடைய கடின உழைப்பை பாராட்டி, டாட்டா நிறுவனமும் எனக்கு பரிசுகளைக் கடந்த ஆண்டு வழங்கியது.
இந்த நிலையில், டாட்டா நிறுவனம் 25 ஆயிரம் தொழிலாளர்களை ஒரே நேரத்தில், முன்னறிவிப்பு எதுவுமின்றி வேலையில் இருந்து நீக்கிவிட்டு, அதற்கு பதில் 55 ஆயிரம் புதிய, அனுபவம் இல்லாதவர்களை நியமிக்க முடிவு செய்துள்ளது. அந்த 25 ஆயிரம் பேரில் நானும் ஒருவராக உள்ளேன். என்னை பணி நீக்கம் செய்து கடந்த டிசம்பர் 22 ஆம் தேதி உத்தரவினை எனக்கு டாட்டா நிறுவனம் வழங்கியது.
இந்த உத்தரவு ஜனவரி 21ஆம் தேதி (இன்று) முதல் அமலுக்கு வருகிறது. தற்போது நான் கர்ப்பமாக உள்ளேன். மேலும், என் சம்பளத்தின் அடிப்படையில் வீட்டு கடன் உள்ளிட்ட பல்வேறுவிதமான கடன்களை வாங்கியுள்ளேன். இந்த நிலையில், என்னை பணி நீக்கம் செய்வதால் எனக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும். எனவே, என்னை பணி நீக்கம் செய்தது தொழில் தாவா சட்டம், பிரிவு 25-யை மீறிய செயலாகும். இந்த சட்டத்தின் பிரிவு 2-ஏயின் கீழ், தொழிலாளர் நலத்துறை சமரச அதிகாரியிடம் புகார் மனு அளித்துள்ளேன். என் புகார் மீது விசாரணை நடத்த சமரச அதிகாரிக்கு உத்தரவிட வேண்டும். என்னை பணி நீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
இந்த மனு நீதிபதி எம். துரைசாமி முன்பு கடந்த 13ம் தேதி விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த அவர் பணி நீக்கம் செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு 4 வாரம் இடைக்கால தடை விதித்ததுடன், இது குறித்து டி.சி.எஸ். பதில் அளிக்கக் கோரி அந்நிறுவனத்தின் மனிதவள அதிகாரி, தொழிலாளர் நல சமரச அதிகாரி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
இந்த சூழலில் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்குமாறு டி.சி.எஸ். சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதி வழக்கை நேற்று விசாரித்தார். அப்போது டி.சி.எஸ். சார்பில் ஆஜரான வழக்கறிஞர் யசோத்வர்தன், சசிரேகாவை பணி நீக்கம் செய்த உத்தரவை வாபஸ் பெறுவதாகக் கூறி அது குறித்த கடிதத்தை நீதிபதியிடம் அளித்தார்.
இதையடுத்து சசிரேகா தொடர்ந்த வழக்கை நீதிபதி தள்ளுபடி செய்தார்.