செங்கோட்டை அருகே டீக்கடையில் தீ விபத்து.. பொருட்கள் எரிந்து நாசம்
செங்கோட்டை: செங்கோட்டை அருகே நேற்று டீக்கடையில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது.
செங்கோட்டை அருகே பெரிய பிள்ளை வலசை கிராமத்தில் மைதீன் என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார். அவரது கடையில் எதிர்பாரதவிதமாக நேற்று தீடீரென தீ விபத்து ஏற்பட்டது. உடனே செங்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.
தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்துகொண்டிருந்த போது, அந்த வழியில் உள்ள ரயில் தடத்தில் ரயில் என்ஜின் சோதனை ஓட்டம் நடந்தது. இதனால் சுமார் 15 நிமிடம் கேட் திறக்கப்படவில்லை. பின்னர் ரயில்வே கேட் திறக்கப்பட்டது. பின்னர் தீயணைப்பு வாகனம் அந்த பகுதிக்குள் செல்வதற்குள் டீக்கடை முற்றிலும் எரிந்து நாசமாகியது.
இந்த தீவிபத்தால் கடையில் இருந்த குளிர்பானங்கள், டீ பாய்லர், மற்றும் பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமானது. இதன் மதிப்பு ரூ.50 ஆயிரத்திற்கு மேல் இருக்கும் என தெரிகிறது. இதுகுறித்து செங்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த தீவிபத்து மின்கசிவு காரணமாக ஏற்பட்டதா? வேறு ஏதும் காரணமா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து பகவதிபுரம் வரை ரயில்வே பாதை திறக்கப்பட்ட பின்னரும் அந்த பாதையில் ரயில் இன்ஜினை இயக்காமல் வழக்கமான பாதையில் ரயில் எஞ்சினை இயக்குவதால் தீயணைப்பு வாகனம், ஆம்புலன்ஸ் வாகனம் உள்ளிட்ட வாகனங்கள் அவசர தேவைகளுக்கு செல்ல முடியாத சூழல் ஏற்படுவதாகவும் இதுகுறித்து ரயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.