பெரம்பலூர் அருகே பட்டப் பகலில் ஆசிரியை வழிமறித்து கத்தியால் குத்தி கொலை
பெரம்பலூர் அருகே ஆசிரியை ஒருவரை 2 பேர் வழி மறித்து நடுரோட்டில் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
குன்னம்: பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே ஆசிரியை ஒருவரை இரண்டு பேர் வழி மறித்து நடுரோட்டில் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கத்தியால் குத்தியவனை பொதுமக்கள் விரட்டிப்பிடித்து தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைத்தனர்.
பெரம்பலூர் மாவட்டம், நான்கு ரோடு அருகே உள்ள மாலா நகரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் சேட்டு மகள் கமருன்னிசா(27). இவர் குன்னம் வட்டம் அல்லிநகரம் அருகே உள்ள இளந்தங்குளி கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்துள்ளார்.
இவர் பணியாற்றிய இளந்தங்குளி கிராமத்துக்கு செல்ல பேருந்து வசதி இல்லாததால், பெரம்பலூரிலிருந்து குன்னம் அருகே உள்ள அல்லிநகரத்துக்கு சென்று பிறகு அங்கிருந்து டூவிலரில் இளந்தங்குளி கிராமத்துக்கு சென்றுள்ளார்.
கமருன்னிசாவும் பெரம்பலூர் மாவட்ட பாரதிதாசன் நகரைச் சேர்ந்த ஆனந்த் என்பவரும் சிறு வயதிலிருந்தே காதலித்து வந்துள்ளனர். சமீப காலமாக கமருன்னிசா ஆனந்த்திடமிருந்து விலகியுள்ளார். மேலும், ஆனந்த் கமருன்னிசாவை திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தி வந்துள்ளார். இதற்கு கமருன்னிசா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆசிரியை கமருன்னிசா இன்று வழக்கம் போல இளந்தங்குளி பள்ளிக்கு செல்ல பெரம்பலூரிலிருந்து அல்லி நகரம் சென்று அங்கே இருந்த அவருடைய டூவிலரை எடுத்துக்கொண்டு பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது அங்கே தனது நன்பனோடு வந்த ஆனந்த் ஆசிரியை கமருன்னிசாவை வழிமறித்து தாக்கி கத்தியால் குத்தி தப்பி ஓடியுள்ளனர்.
பட்டப் பகலில் நடுரோட்டில் ஆசிரியை இருவர் வழிமறித்து கத்தியால் குத்தியதால் அல்லிநகரம் கிராமமே பதற்றமானது.
இதைப்பார்த்த அந்த கிராமத்து மக்கள் ஆசிரியை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடியவர்களை விரட்டிச் சென்று ஆனந்த் என்பவரை மட்டும் மடக்கிப் பிடித்தனர். அவரை அடித்து உதைத்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். உடன் வந்த இன்னொருவர் தப்பி ஓடிவிட்டார்.
கத்தி குத்தில் படுகாயமடைந்த ஆசிரியை கமருன்னிசா அரியலூர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். கொலை செய்த ஆனந்த்தை கைது செய்த குன்னம் போலீஸார் இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஆனந்த்துடன் வந்த இன்னொரு நபரை போலீஸார் தேடிவருகின்றனர். மேலும், ஆசிரியையின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.