நீர்கட்டி அறுவை சிகிச்சையின் போது ஆசிரியை திடீர் இறப்பு… உறவினர்கள் போராட்டம்
நீர்க்கட்டிக்காக அறுவை சிகிச்சை செய்த போது ஆசிரியை ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் கொந்தளித்த உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி: தூத்துக்குடி தனியார் மருத்துவமனையில் சிகிச்சையின் போது ஆசிரியை இறந்ததால் அங்கு உறவினர்கள் போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள ராமசந்திரபுரத்தை சேர்ந்தவர் செல்வன். இவரது மனைவி சண்முகப்பிரியா. இவர்களுக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது.
அரியலூர் அரசு பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்த சண்முகப்பிரியா கர்ப்ப பையில் ஏற்பட்ட நீர்க்கட்டியை அகற்ற நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அறுவை சிகிச்சையில் ஆசிரியை பலி
அறுவை சிகிச்சைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மருத்துவர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். அப்போது எதிர்பாராவிதமாக ஆசிரியையின் உடல் நிலை மோசமானதாகக் கூறப்படுகிறது. இதனால் சண்முகபிரியா அறுவை சிகிச்சை செய்து கொண்டிருந்த போதே உயிர் இழந்ததாக கூறப்படுகிறது.
உறவினர் போராட்டம்
இதுகுறித்து தகவல் அறிந்ததும் அவரது உறவினர்கள் மருத்துவமனைக்கு முன் திரண்டனர். தவறான சிகிச்சையால் அவர் உயிர் இழந்ததாக கூறி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
போலீசார் சமாதானம்
இந்தத் தகவலை அறித்த ஏஎஸ்பி செல்வன் நாகரத்தினம் தலைமையிலான போலீசார் சம்பவ
இடத்திற்கு வந்தனர். அங்கு போராட்ட குழுவினரை சமதானம் செய்தனர். அறுவை சிகிச்சையின் போது ஆசிரியை உயிரிழந்ததை சந்தேக மரணம் என வழக்கு பதிந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கார்டியக் அட்டாக்
இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் தங்களது விளக்கத்தை அளித்துள்ளனர். அதில், அறுவை சிகிச்சை முடிந்து திடீரென கார்டியக் அட்டாக் ஏற்பட்டதால் உயிர் இழப்பு ஏற்பட்டது என்று கூறியுள்ளனர்.