நாமக்கல்லில் மூன்றாம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் கைது
நாமக்கல்: நாமக்கல்லில் மூன்றாம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் பள்ளிபாளையத்தை அடுத்து உள்ள அன்னை சத்யா நகரில் அரசு துவக்கப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. பரமத்திவேலூர் அருகில் உள்ள குன்னமலையை சேர்ந்த துரைமுருகன்(32) என்பவர் அந்த பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
அவர் மூன்றாம் வகுப்பு மாணவிகளிடம் சில்மிஷம் செய்துள்ளார். இது குறித்து மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து பெற்றோர்கள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பள்ளிக்கு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் பள்ளிக்கு வந்து பெற்றோர்களை சமாதானப்படுத்தினர். பெற்றோர்கள் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தினர். விசாரணையில் துரைமுருகன் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்தது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் துரைமுருகனை கைது செய்தனர். கைது செய்யப்பட்டுள்ள துரைமுருகனை சஸ்பெண்ட் செய்து மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் இந்திராகாந்தி உத்தரவிட்டார்.