எங்க டீச்சரை மாற்றாதே.. பாச மழையில் இசபெல்லா ஜூலி.. அழ வைத்த மாணவர்களின் போராட்டம்!
நாகை பள்ளியில் ஆசிரியை இடமாற்றத்தை கண்டித்து மாணவர்கள் பாச போராட்டம் நடத்தினர்.
நாகை: நாகை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியை இசபெல்லா ஜூலியின் இடமாற்றத்தை கண்டித்து மாணவர்கள் அழுது பாச போராட்டத்தை நடத்தினர்.
நாகை மாவட்டம் வடக்கு பொய்கைநல்லூரில் 1939-ஆம் ஆண்டிலிருந்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் இப்பள்ளியில் தலைமை ஆசிரியர் உள்பட 4 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
[Read This: 'சார், போகாதீங்க சார், நீங்க எங்களுக்கு வேணும் சார்'..கதறிய மாணவர்கள்..பதறிய ஆசிரியர்-பாச போராட்டம்!]
இந்த பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதால் இங்கு பணியாற்றி வரும் இசபெல்லா ஜூலியை வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்ய மாவட்ட கல்வி அலுவலகம் உத்தரவிட்டது.
போராட்டம்
இந்த இடமாற்றத்துக்கு மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் பெற்றோர்களுடன் இணைந்து திடீர் போராட்டத்திலும் ஈடுபட்டனர். அந்த போராட்டத்தில் ஆசிரியர் குறைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பள்ளி குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறியும் போராட்டம் நடத்தினர்.
ஆசிரியர் அழுதார்
ஆசிரியர் இசபெல்லா ஜூலியை இடமாற்றம் செய்யக் கூடாது. இதே பள்ளியில் அவர் தொடர வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து ஆசிரியையை சூழ்ந்து கொண்டு மாணவர்கள் கதறி அழுதனர். இதை பார்த்து ஆசிரியரும் அழுதார்.
250 மாணவர்கள்
இதே போல் திருவள்ளூர் மாவட்டத்திலும் பாச போராட்டம் நடத்தப்பட்டது. பள்ளிப்பட்டை அடுத்த வெள்ளியகரம் பகுதியில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் 6 முதல் 10ஆம் வகுப்பு வரை 250 மாணவர்கள் படித்து வருகின்றனர்.
அழுத மாணவர்கள்
இங்கு ஆங்கிலப் பாடம் நடத்தும் ஆசிரியர் பகவானை பணியிடமாற்றம் செய்து அரசு உத்தரவு பிறப்பித்தது. பணியிட மாற்ற ஆணை வாங்க பகவானை ஆசிரியர்கள் சூழ்ந்து கொண்டு அழுது அவரை வெளியேற விடாமல் பள்ளிக்குள் இழுத்தனர்.
பெற்றோர் நிம்மதி
மாணவர்களும் பள்ளிக்கு பூட்டு போட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அவர் இப்பள்ளியில் சில காலத்துக்கு தொடருவார் என்று வாய்மொழி உத்தரவை அரசு பிறப்பித்துள்ளது. இதனால் மாணவர்களும் , பெற்றோரும் நிம்மதி அடைந்தனர்.