கணக்கு வாத்தியாரின் “கொள்ளை” கணக்கு – பெண்ணை கிரிக்கெட் பேட்டால் அடித்து நகை கொள்ளை
திருப்பூர்: திருப்பூரில் வீட்டிலிருந்த கிரிக்கெட் மட்டையால் அடித்து பெண் ஒருவரிடம் நகை கொள்ளையடித்த கணக்கு ஆசிரியர் உட்பட இருவர் போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம், காங்கயத்திலுள்ள முல்லை நகரை சேர்ந்தவர் ஜெயப்பிரகாஷ். இவர் மனைவி சுபிதா.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு மதியம் 12 மணியளவில் வீட்டில் தனியாக இருந்த சுபிதாவின் கண்களில் மிளகாய் பொடியை தூவி, கிரிக்கெட் பேட்டால் தலையில் அடித்து போட்டுவிட்டு அவரது கழுத்திலிருந்த 5 பவுன் தங்க சங்கிலியை மர்மநபர்கள் யாரோ திருடிச் சென்றனர்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காங்கயம் போலீசார் தனிப்படை அமைத்து விசாரனை மேற்கொண்டனர். அக்கம் பக்கம் இருந்தவர்களிடம் விசாரித்ததில், சம்பவம் நடந்த நேரத்தில், அங்கு வந்ததாக கூறிய இரு நபர்களில் காங்கயத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் கணக்கு ஆசிரியராக பணியாற்றிய, மொடக்குறிச்சியை சேர்ந்த இளங்கோவன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்ட இளங்கோவன் அவல்பூந்துறையை சேர்ந்த தேவராஜ் என்ற நண்பருடன் சேர்ந்து இச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இளங்கோவன், காங்கயம் பள்ளியில் வேலை செய்த அறிமுகத்தைக் கொண்டு அங்கு வசிக்கும் நபர்கள் குறித்து விவரங்களை சேகரித்துள்ளார்.
அதன் மூலம் பகல் நேரங்களில் சுபிதா மட்டும் வீட்டில் தனியாக இருப்பதை தெரிந்துகொண்ட இளங்கோவன் தனது நண்பருடன் வந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
திருப்பூரில் தங்கி அங்குள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்த தேவராஜூவையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் கொள்ளையடித்துச் சென்ற நகையை பறிமுதல் செய்தனர்.