எங்கே போயின அந்த பள்ளி நாட்கள்..?
-லதா சரவணன்
செப்டம்பர் 5 ஆசிரியர்கள்தினம், இந்நாளின்சிறப்பு பற்றி நாம் ஏற்கனவே படித்திருப்போம். கெளரவ முனைவர், பாரத ரத்னா விருதுபெற்று இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவராக இருந்த அய்யா ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளை ஆசிரியர் தினமாகக் கொண்டாடுகிறோம்.
ஒரு நல்ல குரு பலநல்ல மாணவர்களை உருவாக்க முடியும். மாணாக்கர்கள் ஆசிரியர்களுக்குள் இடையிலான உறவு பெற்றோர்க்கும் பிள்ளைகளுக்கும் இடையிலான உறவுதான். உலகில் வெற்றி ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருப்பவரும் இனிமேல் அதில் ஏறத் துடிப்பவரும் ஓர் அழுத குழந்தைதான். ஆசிரியர் என்னும் எழுதுகோலில் பிள்ளைகளின் புத்தகம் கிறுக்கப்படுகிறதா? இல்லை வரையப்படுகிறதா என்பதுதான் இப்போதைய வாதம்.
அன்றைய காலத்தில் மாதா, பிதா என்ற வரிசையில் மூன்றாவதாய் குருவை மதித்தார்கள். நான்கு பென்ஞ்சுக்கு நடுவில் ஒரு
கேள்விக்கு பதில்சொல்லி ஆசிரியரின் நன்மதிப்பை பெற்றிட அன்றைய மாணவர்கள் விரும்பினார்கள். இலேசாய் வெட்கப்பட்டு தனக்கு அளிக்கப்பட்ட கைதட்டலை ஏற்று வீட்டுக்குள் புத்தகப்பையை கீழே போடுமுன் அன்னையிடம் சீராடும் அந்த காலப் பிள்ளைகள் இன்று இல்லை என்பது நிதர்சனம்
முதலில் பாராட்ட ஆசிரியர்கள் இல்லை, அப்படியே பாராட்டினாலும் மாணவர்களுக்கு அது போதவில்லை, அன்றைய நிகழ்வுகளை பகிர்ந்து கொள்ள பிள்ளைகளுக்கு மனமில்லை, கேட்டு மகிழ அன்னையும் வீட்டில் இருப்பதில்லை, இன்றைய
பொருளாதாரம் எல்லாவற்றையும் புரட்டிப்போட்டு இருக்கிறது. முதுகொடியும் புத்தகச் சுமையோடு, பெற்றோரின் கெளரவத்தின் அளவுகோலாக, ஆசிரியரின் எதிர்பார்பினை பூர்த்தி செய்யும் விண்ணப்ப படிவமாக, மலிந்து கிடக்கும் இணையச் சுகத்திற்கு அடிமையாக இன்றைய பிள்ளைகள் மாறிவருகின்றன.
2 வகுப்பு படிக்கும் பிள்ளைகளுக்கு கூட இன்று பிராஜெக்ட் என்றொன்று தந்து விடுகிறார்கள். அன்றைய வகுப்பில் நாம் கண்டிருப்போம் சில கலந்துரையாடல்களை மொழிவழிப் பயிற்சியை இதனால் மாணவர்களின் நல்லெண்ணமும், அக்கறையும் ஒருவரையொருவர் முந்தும் திறனும் வளர்ந்தது. இன்று எங்கோ புத்தக கடைகளில் அலைந்து சில ஸ்டிக்கர்களை வாங்கி, என்னவென்றே தெரியாமல் கூகுளில் அதைப் பற்றி புரியாத ஒரு நாலைந்து வரிகள் அந்த வெள்ளைத் தாளில் அங்கங்கே அலங்கார உபசரிப்புகள் வெறும் மெனக்கெடல்களாக இன்றைய புராஜெக்ட்டுகள் அமைந்து விடுகிறது. அதை ஏன் செய்கிறோம் என்று கூட பிள்ளைகளுக்கு தெரிவதில்லை,
அரசாங்கப் பள்ளியில் படித்தவர்களால் தொடர்ந்தாற்போல ஆங்கிலம் பேச முடியவில்லை, கான்வென்ட்டுக்களைத்தேடி ஒடியதால் இன்று கெளரவப்பட்டமாக அமைந்துவிட்டது படிப்பு. ஒரு விளையாட்டுத் துணுக்கு, ஒரு திருடன் வீட்டுக்குள் நுழைந்து எல்லாப் பொருட்களையும் திருடுகிறான். அந்த வீட்டுக் குழந்தைஅதன் புத்தகப்பையினை அவனிடம் கொடுத்து எடுத்துப்போகச் சொல்வதைப் போல படிப்பு இன்றுபெரும் சுமையாகத்தான் போய் இருக்கிறது. சிற்பத்தை உருவாக்கும் உளிகள் வசிக்கும் இடத்தைப் பொறுத்துதான் இன்று கல்வி வரையறுக்கப்படுகிறது. எப்பபாரு படி படின்னு சொல்றாங்க? இவங்க காலத்தை சொல்லி சொல்லி எங்களை மிஷினாக நடத்துறாங்க இது பிள்ளைகள் தரப்புவாதம், அடிக்கக் கூடாது, திட்டக் கூடாது,
மென்மையா சொன்னா இந்தக் காலத்துலே யார் சார் கேட்குறாங்க, நாங்க படிச்ச காலத்திலே எல்லாம் வாத்தியார் அந்தப் பக்கம் நின்னா கூட நாங்க ஒதுங்கிப்போவோம். இப்போ எங்க முன்னாடியே பிள்ளைகள் எங்களை கிண்டல் செய்யறாங்க, எல்லாம் கலி காலம். வாங்குற சம்பளத்திற்கு கிளாஸ்ல கொஞ்ச நேரம் கத்திட்டு போறோம், படிச்சா அதுங்களுக்கு நல்லது படிக்கலைன்னா எப்படியாவது போகட்டும் இப்படி சில ஆசிரியர்கள். குறித்தநேரத்தில் சிலபஸ் முடிக்கணும், இல்லைன்னா மேலிடத்திலே இருந்து பிரஷர் போனவருடம் மாதிரி இந்த வருடமும் சென்டம் தரணும் அதுக்கு நான் கால நேரம் பார்க்காம உழைக்க தயாரா இருக்கேன். இங்கேயுள்ள எல்லா மாணவர்கள்கிட்டேயும் என் நம்பர் இருக்கு. எப்ப வேணுமின்னாலும் சந்தேகம் கேட்கலாம் அவங்களும் நம்ம பிள்ளைகள் தானேபெத்தவங்களை விடவும் பகல் முழுவதும் நம்மகூட தான் செலவழிக்கிறாங்க இப்படி அக்கறையாய் சொல்லும் ஆசிரியர்கள் மறுபுறம். லட்சக்கணக்குல பீஸ் கட்டுறேன், சிங்கிள் டிஜிட்லே மார்க் வாங்கிட்டு வர்றே உங்க டீச்சர் என்னதான் நடத்தறாங்களோ கல்வியை வியாபாரமாய் நடத்தும் இடத்தில் பிள்ளையை கால்கடுக்க க்யூவில் நின்று சேர்த்துவிட்டு அவன் முதுகை பெல்ட்டால் பதம் பார்க்கும் பெற்றோர் ஒருபுறம்.
பள்ளிகள் கூட தேவலாங்க ஆனா இந்த கல்லூரியில் நாங்க பிள்ளைகள் கிட்ட படற அவஸ்தையிருக்கே, காலேஜின்னாலே பொழுதுபோக்குன்னு மனசுலே பதியவைச்சிடுச்சு தமிழ் சினிமா. யாரையும் மதிக்கக் கூடாதுங்கிற எண்ணத்தோடயே பிள்ளைகள் வர்றாங்க சிலர் பொறுப்போடு படிக்கிறாங்க சிலர் ..... பாதியிலேயே நிறுத்திவிட்டு செல்லும் ஒரு கல்லூரி பேராசிரியர். சாட்டை, பசங்க, பசங்க 2 இன்னும் எத்தனையோ படங்கள் பள்ளி மற்றும் குழந்தைகள் ஆசிரியர்களுக்கு
உள்ள ஒரு உறவைஎடுத்துச் சொல்லியிருக்கிறது.
ஆசிரியர்களே மாணவர்களை திருமணம் செய்து கொள்வது, தவறான வழிக்கு கொண்டு செல்வது போன்ற இழிநிலையும் நாம் கண்டு கொண்டுதான் இருக்கிறோம். தவறுகள் மலிந்து கொண்டு வருகிறது. சந்தர்ப்பங்கள் அதற்கு வழிவிட்டு துணை புரிகிறது. இன்று வெவ்வெறு துறையில் இருக்கும் அத்தனை பேரும் வாழ்வில் ஒரு முறையாவது நான் டீச்சர் ஆகப்போகிறேன் என்று மேல்துண்டில் புடவை கட்டி பிரம்பு கொண்டு 'அ' வையும் 'ஆ' வன்னாவையும் சுவற்றில் கற்றுக்கொடுத்தவர்கள்தான். இந்த நாளில் வெறுப்பு சுகதுக்கம் மறந்து பணம் ஒன்றே பிரதானமாய் வாழும் கல்வி நிறுவனங்களுக்கு மத்தியில் நாளைய சமுதாயத்தை நான் நலமுடன் வாழ செய்வேன் அதை அப்பழுக்கில்லாமல் உருவாக்கும் சிறந்த உளியாய் நான் இருப்பேன் என்று ஆசிரியரும், உளியின் அடியைத் தாங்கிக் கொண்டு, கல்வி என்னும் கண் திறக்கும் ஆசிரியர்கள்அன்னையாய் தந்தையாய் மதித்து வாழ்வில் முன்னேற வேண்டும் என்று மாணவரும் முன்மொழிய வேண்டும்.
ஒரு மாணவனின் உயர்ந்த நிலையைப் பார்த்து, பொறாமை கொள்ளாதவர்கள் ஆசிரியர்கள், அவர்களின் பணி பணம், சுயலாபம், என எதையும் எதிர்பார்க்காதது, நம்மை செதுக்கும் அவர்களை மதித்து இந்நன்னாளை அவர்களுடன் நாம் கொண்டாடுவோம்.
இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்