தாய் போல காக்க வேண்டிய நீங்களே இப்படி பேசினால் எப்படி அமைச்சரே!
அமைச்சர் வீரமணியின் பேச்சினால் ஆசிரியர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
சென்னை: ஒரு அமைச்சரே இப்படி பேசலாமா? டாஸ்மாக் வருமானத்தில்தான் பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கப்படுவதாக ஒரு அமைச்சரே இப்படி பேசலாமா?
உலகிலேயே கூலி கொடுக்க முடியாத, நிர்ணயிக்க முடியாத, எவ்வளவு கொடுத்தாலும் ஈடாகாத சேவை என்பது ஆசிரியர் பணிதான். நாளைய சமுதாயத்தின் எதிர்காலத்தின் பெரும்பகுதியே ஆசிரியர்களிடம்தான் உள்ளது. தத்துவ மேதை டாக்டர் ராதாகிருஷ்ணன் விவேகானந்தரை போன்று துணிச்சல் மிக்கவர். நேரு ஆட்சியின்போது, 'அரசு போகும் போக்கு சரியில்லை" என தைரியமாக சொன்னவர்.
நடமாடும் பகவான்கள்
இன்றைய ஆசிரியர்கள் பெற்று வரும் பல சலுகைகளான பென்ஷன் முதல்கொண்டு கிடைத்துவருவதற்கு அவர்தான் காரணம். டாக்டர் ராதாகிருஷ்ணனை போல ஏராளமான ஆசிரியர்கள் ஆசிரியப்பணியினை தவமாக, மூச்சாக, உயிராக நினைத்து பணியாற்றி மறைந்தும் போயிருக்கிறார்கள்... இன்னமும்கூட பகவானை போன்ற ஆசிரியர்கள் நடமாடி வரத்தான் செய்கிறார்கள்.
எதிர்கால தூண்கள்
இன்றைக்கும் கோவையை சேர்ந்த ஸதி என்பவர் நல்லாசிரியர் விருது பெற்றுள்ளார். எதிர்கால இந்தியா என ஒவ்வொரு மாணவனையும் நினைத்துதான் ஆசிரியர்கள் கல்வி புகட்டுகிறார்கள். அதேபோல தங்களை நல்வழிப்படுத்தும் நெறிப்படுத்தும் ஆசிரியர்களின் சொல்லை கேட்டுத்தான் பெரும்பாலும் மாணவர்கள் நடந்து வருகிறார்கள்.
இப்படிதான் சம்பளமா?
ஆனால், மது விற்ற பணத்தினை கொண்டுதான் ஆசிரியர்களுக்கு சம்பளம் தரப்படுகிறது என்று ஒருவர் சொன்னால், அதுவும் ஒரு மாநில அமைச்சர் பொதுக்கூட்டத்தில் பேசினால் இது ஆசிரியர்களை அவமதிப்பதுபோல் ஆகாதா? மது விற்ற பணத்தில்தான் கல்வித்துறை இயங்கி வருகிறதா? ஆசிரியர்களின் சம்பள ஒதுக்கீடும் காலம் காலமாய் இப்படித்தான் கொடுக்கப்பட்டு வந்திருக்கிறதா? வருடா வருடம் ஜனாதிபதி கையால் விருதுபெறும் ஆசிரியர்களுக்கும் இத்தகைய பணம்தான் வழங்கப்பட்டதா?
ஆசிரியர்களை மதிப்பார்களா?
மதுவிற்பனைக்கு அமைச்சர் சொல்லும் காரணமா இது? மதுவை ஒழிக்க முடியாது என்று மறைமுகமாக ஆணித்தரமுடன் பதிவு செய்ய பார்க்கிறாரா? தங்கள் ஆசிரியர்களுக்கு இப்படித்தான் வருமானம் சென்றடைகிறது என்று தெரிந்தால் மாணவர்கள் அந்த ஆசிரியரை மதிப்பார்களா? மாணவர்கள் மனதில் என்னவெல்லாம் யோசிக்க வரும்? மது விற்பனை சரி என்று இளம்பிஞ்சுகளுக்கு நினைக்க தோணாதா? தொழிலை தெய்வமாக போற்றி மதிக்கும் ஆசிரியர்களுக்கு மாதா மாதம் சம்பளம் வாங்கும்போது அவர்களின் மனநிலை என்னவாக இருக்கும்? டாஸ்மாக் விற்ற பணத்தில்தான் பள்ளிகளும் கட்டப்பட்டு வருகின்றன என்றால் பெற்றோர்களின் மனநிலை என்னவாக இருக்கும்?
கொச்சைப்படுத்தலாமா?
இப்படி ஒரு அமைச்சர் பகிரங்கமாக பேசினால், ஆசிரியர் தொழில் மீது யாருக்கு மரியாதையும், மதிப்பும் வரும்? அமைச்சர் வீரமணியின் பேச்சு முழுக்க முழுக்க அநாகரீகமானது... தவறானது... கொச்சைப்படுத்துவது... இதனால் ஆசிரியர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாவார்களே என்றுகூட யோசிக்காமல், டாஸ்மாக் விற்பனை ஜரூராக நடைபெற்றால் போதும் என்று ஆட்சியாளர்களே நினைத்தால் எப்படி? ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட தமிழக மக்களை தாய்போல காக்க வேண்டிய உங்களை போல இப்படி பேசலாமா அமைச்சர்களே?