10, 12 வகுப்பு பொதுத்தேர்வு அறைக்குள் செல்போன் பயன்படுத்த ஆசிரியர்களுக்குத் தடை
சென்னை: 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் தேர்வு அறைக்குள் செல்போன் கொண்டு செல்லத்தடை விதித்து தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
பிளஸ் டூ மற்றும் எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் மற்றும் 100 சதவீதம் தேர்ச்சி பெறும் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பது வழக்கம். இதற்காக சில தனியார் பள்ளிகள் தங்கள் பள்ளி மாணவர்களுக்கு தேர்வில் உதவுவதாக பரவலாக குற்றச்சாட்டு நிலவுகிறது.
இந்நிலையில் தற்போது நடக்கும் பிளஸ் டூ பொதுத் தேர் வில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தேர்வு அறைக்குள் ஆசிரியர்கள் செல்போன் பயன் படுத்த தடை உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அந்தந்த தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர் தேர்வுக்கு முன்பாக நடத்தும் தேர்வுப் பணி குறித்த கூட்டத்தில் அறை கண்காணிப்பாளர்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும். முதன்மை கண்காணிப்பாளரிடம் தங்களது செல்போன் எண்ணை வழங்க வேண்டும்.
பிளஸ்2, 10ம் வகுப்பு தேர்வு மையத்தில் காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை சாதாரண தொலைபேசியை மட்டுமே பயன்படுத்த வேண்டும். தேர்வு அலுவலர்கள் அனைவரின் செல்போன்களும் ‘சுவிட் ஆப்' செய்து தேர்வு கட்டுப்பாட்டு அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட வேண்டும்.
அவசர தேவைக்கு மட்டும் மாவட்ட முதன்மை கண்காணிப்பாளர், துறை அலுவலர், அலுவலக அறையில் செல்போனை பயன்படுத்தலாம். ஒவ்வொரு தேர்வு நாள் அன்றும் தேர்வு முடிந்ததும் தேர்வு வராதவர்களின் விவரங்களை பிற்பகல் 3 மணி முதல் 4 மணிக்குள் www.tndge.in என்ற இணையதளத்தில் முதன்மை கண்காணிப்பாளரே பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இணையதள வசதி இல்லாத இடங்களில், அருகில் உள்ள தேர்வு மையத்தின் கணினி வசதியை பயன்படுத்தலாம். அல்லது கல்வி அலுவலக உதவியுடன் பதிவேற்றம் செய்வதை உறுதி செய்ய வேண்டும் என்பது உள்பட பல அறிவுரைகள் இடம் பெற்றுள்ளன.
அப்படி இருந்தும் கடந்த ஆண்டு கடந்த ஆண்டு மார்ச், 18ம் தேதி பிளஸ் 2 கணிதத் தேர்வில், ஓசூர், பரிமளம் மெட்ரிக் பள்ளி தேர்வு மையத்தில், விஜய் வித்யாலயா பள்ளி ஆசிரியர் கோவிந்தன் மற்றும் மகேந்திரன் ஆகியோர், 'வாட்ஸ் - அப்'பில், வினாத்தாளை லீக் செய்தனர். இது தொடர்பாக தேர்வு அறைக் கண்காணிப்பாளர்களான இருவரும் கைது செய்யப்பட்டனர். இப்பிரச்னையில், ஓசூர் மாவட்டக் கல்வி அதிகாரி வேதகன் தன்ராஜ், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். தொடர்ந்து, ஓசூர் கல்வி அலுவலக ஊழியர்கள் சந்திரசேகர், ரமணா, கிருஷ்ணகிரி மாவட்டக் கல்வி அலுவலக ஊழியரான, மற்றொரு சந்திரசேகர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகக் கண்காணிப்பாளர் அசோக்குமார் ஆகியோரும், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.
கல்வி அதிகாரிகள் நடத்திய விசாரணையில் ஒசூர் தனியார் பள்ளித் தேர்வு மையக் கண்காணிப்பாளர்களாகப் பணியாற்றியவர்களையும், கட்செவி அஞ்சல் மூலம் வினாத்தாளை அனுப்பிய ஆசிரியர்கள் பணியாற்றிய பள்ளி, அதன் குழுமப் பள்ளி என மொத்தம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3 பள்ளிகளைச் சேர்ந்த 93 கண்காணிப்பாளர்கள் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் இந்த ஆண்டு 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் தேர்வு அறைக்குள் செல்போன் கொண்டு செல்லத்தடை விதித்து தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. தேர்வு எழுதும் மாணவர்கள் எழுதிய விடைகள் அனைத்தையும் கோடிட்டு அடித்துவிட்டால் அடுத்து வரும் இரு தேர்வுகளில் பங்கேற்கத் தடை விதிக்கப்படும் தேர்வுத்துறை இயக்குநர் வசுந்தரா தேவி தகவல் தெரிவித்துள்ளார்.