சென்னிமலை: நாட்டுக்கோழி பிரியாணி, வறுவலுடன் மாணவர்களுக்கு கறிவிருந்து கொடுத்து அசத்திய ஆசிரியர்கள்
அரசு பள்ளி மாணவர்களுக்கு நாட்டுக்கோழி விருந்து படைத்து ஆசிரியர்கள் அசத்தியுள்ளனர்.
Recommended Video
சென்னிமலை: மூக்கை துளைக்கும் நாட்டுக்கோழி பிரியாணி, மொறு மொறு கோழி வறுவல், அவித்த முட்டை என ஒவ்வொன்றையும் தலைவாழையில் சுடச்சுட பரிமாற அதனை பள்ளி மாணவர்கள் மனமகிழ்ச்சியுடனும் ஆர்வத்துடன் சாப்பிட்டனர்.
தமிழகம் முழுவதும் அரசு தொடக்கப்பள்ளிகளில், நேற்றுடன் வகுப்பு முடிவுக்கு வந்தது. இறுதி நாளினை நேற்று, பல பள்ளிகளில் சிறப்பாக கொண்டாடினர்.
அதன் ஒருபகுதியாக, ஈரோடு மாவட்டம் சென்னிமலை யூனியன், பசுவபட்டி அரசு தொடக்கப்பள்ளி மாணவ - மாணவியரும் தங்களது இறுதி நாளை ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்களுடன் கொண்டாடினர். அப்போது மாணவர்களுக்கு கறிவிருந்து நடத்தப்பட்டது.
இதில், மணக்க மணக்க நாட்டுக்கோழி பிரியாணி, கோழி வறுவல், முட்டை என வாழை இலையில் கண்டதும் மாணவர்கள் திக்குமுக்காடி போய்விட்டனர். மகிழ்ச்சியில் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டும், ஆர்வத்துடனும் சாப்பிட்டனர்.
இதற்காக கோழிகள், இலைகள் போன்றவற்றினை அந்த ஊர் இளைஞர்கள் இலவசமாக வழங்கியது சுவாரஸ்யமான தகவல். ஆனால் அதை விட கூடுதல் சுவாரஸ்யம், இந்த விருந்தினை ஆசிரியர்களே தங்கள் கைகளால் சமைத்து பரிமாரியதுதான்.
இதுகுறித்து பேசிய ஆசிரியர்கள், அரசு பள்ளிகளுக்கு ஏழை குழந்தைகள்தான் வந்து படிக்கின்றனர். அவர்களுக்கு எங்களுடைய அன்பினை வெளிப்படுத்தவே கடைசி நாளில் இந்த விருந்து உபசரிப்பு செய்ய நினைத்தோம். கிராமப்புறங்களில் நாட்டுக்கோழி பிரியாணியும் வறுவலும்தான் அதிகபட்ச அசைவவிருந்தாக கருதப்படுகிறது. எனவேதான் அதனை தேர்வு செய்து இறுதி நாளில் அசத்தினோம் என்றனர்.
பேராசிரியை நிர்மலாதேவி செயலால் கல்விதுறை மீது பொதுமக்கள் நம்பிக்கை இழந்து வரும் இந்நேரத்தில், பள்ளி மாணவர்களின்மேல் சென்னிமலை ஆசிரியர்கள் காட்டிய கரிசனமும், உபசரிப்பும் உண்மையிலேயே நெகிழ வைக்கிறது. ஆசிரியர்களின் இந்த உயர்ந்த சிந்தனையும் சீரிய முயற்சியும் கிராமப்புறங்களில் மட்டுமல்லாமல் நகர்ப்புறங்களுக்கும் பரவினால் ஆசிரியர்களின் மேல் அன்பு கூடுவதுடன், அரசு பள்ளிகளின் மேல் அனைவருக்கும் மரியாதை தானாக வந்து சேரும்.