தேர்தல் ஆணையத்தை கண்டித்து ஆசிரியர்கள் திடீர் தர்ணா
நெல்லை: அதிக தொலைவில் உள்ள வாக்குச்சாவடிகளில் தேர்தல் பணிகள் வழங்கப்படுவதாக கூறி நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் பயிற்சிக்கு வந்த ஆசிரியர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை மாவட்டம் தென்காசி நாடாளுமன்ற தொகுதியை சேர்ந்த ஆசிரியர்களுக்கு நாங்குநேரி அரசு மேல்நிலைப்பள்ளியில் தேர்தல் பயிற்சி வகுப்புகள் நடந்தன. இந்த பயிற்சி வகுப்பில் சுமார் 1200க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
இதில் பல ஆசிரியைகள் பலர் தங்கள் குழந்தைகள் மற்றும் கணவருடன் வந்திருந்தனர். 10 மணிக்கு பயிற்சி வகுப்பு தொடங்கிய போதும் பல ஆசிரியர்கள் புதிய இடம் என்பதால் வழி தெரியாமல் சுற்றி திரிந்து ஒரு வழியாக பகல் 11.30 வரை வந்து கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் பணி செய்யும் இடத்திலிருந்து ஆசிரியர்களுக்கு 20 கிமீ தூரத்திற்கும், ஆசிரியைகளுக்கு 10 கிமீ தூரத்திற்குள்ளும் தேர்தல் பணி வழங்குவதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில் தற்போது தென்காசியில் இருந்து 100 கிமீ தூரத்தில் உள்ள வாக்கு சாவடிகளில் தேர்தல் பணி வழங்கப்பட்டிருப்பதாக கூறி தேர்தல் ஆணையத்தை கண்டித்து ஆசிரியர்கள் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதே போல் வடக்கன்குளம்,கூடங்குளம்,ராதாபுரம் பகுதியை சார்ந்தவர்கள் தென்காசி,கடையநல்லூர் தொகுதிகளில் பணியாற்ற தேர்தல் ஆணையம் அறிவித்திருப்பதால் அவர்களும் வேதனை தெரிவித்தனர்.இதன் பின் அவர்கள் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டனர். தேர்தல் ஆணையத்தை கண்டித்து ஆசிரியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவால் ஓட்டு பதிவு தினத்தன்று ஒட்டு பதிவு காலையில் தொடங்குவது தாமதமாகும் என்று கூறப்படுகிறது.