நாளை துவங்கும் பிளஸ் 2 பொதுத்தேர்வு - “குலுக்கல்” முறையில் தேர்வுக் கண்காணிப்பாளர்கள் தேர்வு!
நாமக்கல்: தமிழகத்தில் நாளை பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் தொடங்குவதை முன்னிட்டு அதற்கான தேர்வுக் கண்காணிப்புப்பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 13, 929 மாணவர்கள், 13,555 மாணவியர் என மொத்தம், 28 ஆயிரத்து, 162 பேர் இத் தேர்வு எழுதுகின்றனர்.
இதற்காக, மாவட்டம் முழுவதும், 75 தேர்வு மையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கான வினாத்தாள்கள் 11 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கட்டுக்காப்பு மையங்களில், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி வளாகம் தடை செய்யப்பட்டுள்ள பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு பணிக்காக அரசு பள்ளி தலைமையாசிரியர்கள், 75 பேர் முதன்மை கண்காணிப்பாளர்கள், 1,900 அறை கண்காணிப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற ஆசிரியர்கள் கூட்டத்தில் சம்பந்தப்பட்ட தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர் தங்கள் மையத்துக்கு தேவையான அறை கண்காணிப்பாளர்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்தனர். இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கோபிதாஸ், தலைமையாசிரியர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
இதுபோலவே தனியார் பள்ளிகளில் கண்காணிப்பாளர் பணிக்கு செல்லும் அரசு ஆசிரியர்கள், அந்தப்பள்ளி மாணவர்களுக்கு விடைகளை சொல்லி கொடுப்பதாக ஏற்பட்டுள்ள குற்றச்சாட்டை தவிற்கும் வகையில் இந்த ஆண்டு, +2 தேர்வுக்கூட அறை கண்காணிப்பாளர் பணிக்கு, அரசு பள்ளிகளில் எஸ்.எஸ்.எல்.சி மாணவ, மாணவியருக்கு பாடம் நடத்தும் இடைநிலை ஆசிரியர்களே அதிகம் பேர் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.