சென்னையில் 3-வது நாளாக ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் போராட்டம்- 50 பேருக்கு உடல்நிலை பாதிப்பு
சென்னையில் ஆசிரியர்கள் போராட்டம் தொடருகிறது.
Recommended Video
சென்னை: ஊதிய முரண்பாடுகளைக் களைந்து சமவேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி இடைநிலை ஆசிரியர்கள் சென்னையில் 3-வது நாளாக இன்றும் போராட்டத்தைத் தொடருகின்றனர். இத்தொடர் போராட்டத்தில் 50-க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
2009-ம் ஆண்டுக்கு பின்னர் பணிக்கு சேர்ந்தவர்களுக்கு அதற்கு முன்னர் பணியில் சேர்ந்த ஆசிரியர்களைவிட குறைவான ஊதியம் வழங்கப்படுகிறது என்பது குற்றச்சாட்டு. இந்த ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும் என்பது இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கை.
இதை வலியுறுத்தி சென்னையில் திங்கள்கிழமை முதல் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். எழும்பூர் ராஜரத்தின ஸ்டேடியத்தில் முதலில் போராட்டம் தொடங்கியது. தற்போது சென்னை வள்ளுவர்கோட்டம் அருகே 3-வது நாளாக போராட்டம் நடைபெறுகிறது.
இப்போராட்டத்தின் போது 50க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மயக்கமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அரசு தரப்பில் ஒரே வேலைக்கு ஒரே ஊதியம் வழங்கப்படும் என்கிற உத்தரவாதம் அளிக்கப்பட்டால்தான் போராட்டத்தைக் கைவிடுவோம் என்கின்றனர் ஆசிரியர்கள்.