ஓபிஎஸ் முதல்வரானால் உள்ளே இருந்துகொண்டே உள்ளடி வேலை செய்வோம்...எடப்பாடியை மிரட்டும் தினகரன் கோஷ்டி!
முதல்வர் பதவியை ஓ. பன்னீர்செல்வத்துக்கு விட்டுக் கொடுக்க தினகரன் கோஷ்டி எம்.எல்.ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சென்னை: முதல்வர் பதவியை ஓ. பன்னீர்செல்வத்துக்கு விட்டுக் கொடுத்தால் உள்ளே இருந்து கொண்டே குழிபறிக்கும் வேலைகளை செய்வோம் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை தினகரன் கோஷ்டி எம்.எல்.ஏக்கள் மிரட்டியுள்ளனர்.
அதிமுகவின் ஓபிஎஸ், எடப்பாடி கோஷ்டிகள் இணைவது தொடர்பான பேச்சுவார்த்தையில் மும்முரமாக உள்ளன. இதற்காக அதிமுகவை விட்டு ஒதுங்கியிருப்பதாக டிடிவி தினகரனும் அறிவித்துள்ளார்.
முட்டுக்கட்டை
ஆனால் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களோ இந்த இணைப்பு பேச்சுவார்த்தைக்கு எப்படியெல்லாம் முட்டுக்கட்டை போடலாம் என தீவிரம் காட்டி வருகின்றனர். சில நாட்களுக்கு முன்னர் கோட்டையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களான தங்க தமிழ்ச்செல்வன், வெற்றிவேல் சந்தித்து பேசினர்.
ஓபிஎஸ்-க்கு எதிர்ப்பு
இந்த சந்திப்பின் போது இணைப்பு பேச்சுவார்த்தைக்கு எதிராக எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருங்கள் என எடப்பாடி பழனிச்சாமி கேட்டுக் கொண்டார். ஆனால் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களோ, முதல்வர் பதவியை ஓபிஎஸ்-க்கு விட்டுத் தராமல் இருந்தால் அமைதியாக இருப்போம் என கூறியுள்ளனர்.
அமைச்சரவையை மாற்றுங்க..
இதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிச்சாமி தமக்கு உள்ள நெருக்கடிகளை விவரித்திருக்கிறார். ஆனாலும் சமாதானம் ஆகாத தினகரன் கோஷ்டி எம்.எல்.ஏக்கள், ஓபிஎஸ்-க்கு முதல்வர் பதவி கொடுப்பதை நாங்கள் ஏற்கவே முடியாது. அவருக்கு முதல்வர் பதவி கொடுப்பதற்கு பதிலாக அமைச்சரவையை மாற்றி புதிய முகங்களுக்கு வாய்ப்பு கொடுக்கலாமே என நிபந்தனை விதித்துள்ளனர்.
தனி அணிதான்...
அதையெல்லாம் செய்தால் ஆட்சி கவிழ்ந்துவிடும் என எச்சரித்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. இதற்கும் அசராத தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள், நீங்க ஓபிஎஸ்-க்கு முதல்வர் பதவி கொடுத்தால் எங்கள் பக்கம் இருக்கும் 25 எம்.எல்.ஏக்களும் நிச்சயம் ஒத்துழைப்பு தரமாட்டோம். சட்டசபையில் எதிர்க்கட்சிகளுடன் கைகோர்த்து தனி அணியாக செயல்படுவோம் என மிரட்டியிருக்கின்றனர்.
குடைச்சல் கன்பார்ம்
அதேநேரத்தில் ஆட்சியை கவிழ்க்கவும் மாட்டோம்... ஆனால் உள்ளே இருந்து கொண்டே குடைச்சல் கொடுப்பது மட்டும் நிச்சயம் எனவும் எச்சரித்துள்ளனர். தினகரன் கோஷ்டி எம்.எல்.ஏக்களின் இந்த மிரட்டலால் எடப்பாடி தரப்பு ஆடிப் போயுள்ளதாம்.