கருத்துக் கணிப்பு முடிவை எடுத்துப் போட்டு வாக்கு சேகரிக்கும் கோகுல இந்திரா
சென்னை: நியூஸ் 7- தினமலர் கருத்துக் கணிப்பை எடுத்துப் போட்டு பேஸ்புக் மூலமாக ஆதரவு திரட்டுகிறது சென்னை அண்ணா நகர் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் கோகுல இந்திரா குழு.
நியூஸ் 7 தினமலர் நடத்திய கருத்துக் கணிப்பில் திமுக ஆட்சியைப் பிடிக்கும், அக்கட்சிக்கு 141 தொகுதிகள் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவுக்கு 87 இடங்களே கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் 14 தொகுதிகளில் அதிமுக வெல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் 13 தொகுதிகளில் அதிமுகவின் வெற்றி வாய்ப்பு சிறப்பாக இருப்பதாக கூறியுள்ள நியூஸ் 7 - தினமலர், முதல்வர் ஜெயலலிதா போட்டியிடும் ஆர்.கே.நகரில் மட்டும் நெருக்கமான போட்டி நிலவுவதாக கூறியுள்ளது.
இந்த நிலையில் அமைச்சர் கோகுல இந்திரா பெயரில் வெளியாகும் பேஸ்புக் பக்கத்தில், அண்ணா நகர் தொகுதியில் கோகுல இந்திராவின் வெற்றி வாய்ப்பு குறித்த நியூஸ் 7 முடிவைப் போட்டு விளம்பரப்படுத்தியுள்ளனர். அதேசமயம், ஜெயலலிதா குறித்த கருத்துக் கணிப்பை அவர்கள் போடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.