இன்று மாலை முக்கிய அறிவிப்பு... - மாஃபா பாண்டியராஜன் திடீர் தகவல்!
இரு அணிகள் இணைப்பு குறித்து பேச அமைக்கப்பட்ட குழு கலைக்கவில்லை என மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்
சென்னை: இன்று மாலை நடைபெறும் மே தின கூட்டத்தில் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று ஓபிஎஸ் அணியின் மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளார்.
இரு அணிகள் இணைப்பு குறித்து பேச அமைக்கப்பட்ட குழு கலைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் பிளவு பட்டுள்ள அணிகள் இணைந்தால் மட்டுமே இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுக்க முடியும். சின்னம் இருந்தால் மட்டுமே வெற்றி சாத்தியம். இது இரு அணிகளில் உள்ள எம்எல்ஏக்கள், நிர்வாகிகளுக்கு தெரிந்துள்ளது. ஆனாலும் பேச்சுவார்த்தை இழுபறி நீடிக்கிறது.
பேச்சுவார்த்தை நடத்த இரு அணிகள் சார்பிலும் ஏழு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் செம்மலை, எடப்பாடி பழனிச்சாமி இடையேயான மோதல் அணிகள் இணைப்பில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
சேலத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கட்சியும் ஆட்சியும் நம்மிடத்தில் உள்ளது. 90% தலைமை நிர்வாகிகள் நம்மிடத்தில் உள்ளனர். கட்சியின் 50 மாவட்டங்களில் 48 மாவட்டச் செயலாளர்கள் நம்மிடத்தில்தான் உள்ளனர்.
ஒற்றுமை அவசியம்
123 எம்.எல்.ஏ.க்கள் நமக்கு ஆதரவாக உள்ளனர். பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் பொதுக்குழு உறுப்பினர்கள் 2127 பேரில் 2025 பேர் நம்மிடம் உள்ளனர். எனவே, பிரிந்து சென்றவர்கள் இணைந்தாலும் பரவாயில்லை; இணையாவிட்டாலும் பரவாயில்லை. ஆட்சியும் கட்சியும் நம்மிடம் உள்ளது. நமது குறிக்கோள் திமுகவை வீழ்த்த வேண்டும். இதற்கு ஒற்றுமையோடு ஒருமனதாக இருக்க வேண்டும்.
மாஃபா பாண்டியராஜன்
இன்று காலையில் ஓபிஎஸ் இல்லத்தில் ஆலோசனை நடைபெற்றது. ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய மாஃபா பாண்டியராஜன், இன்று மாலையில் நடைபெறும் மே தின கூட்டத்தில் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்றார். இரு அணிகள் இணைப்பு குறித்து பேச அமைக்கப்பட்ட குழு கலைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாங்கள் தயார்
அதேபோல செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வேலுமணி, இரு அணிகளும் இணைய வேண்டும் என சாதாரண தொண்டன் விரும்புகிறான். இதேபோல் அனைவரும் விரும்புகிறார்கள்.இதனால் 2 அணிகளும் இணைந்தே தீரும். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அணி பேச்சு வார்த்தைக்கு தயாராகவே உள்ளது.
பேச்சுவார்த்தை தொடங்கும்
இரட்டை இலைச் சின்னம் தொடர்பாக இருதரப்பினரும் வழக்கு போட்டியிருக்கிறோம். இப்போது, இருக்கிற சூழ்நிலையில் இருஅணியினரும் ஒன்று சேர்ந்த பின்னர்தான் அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறப்படும். இப்போதைய பிரச்னைக்கு பேச்சுவார்த்தை நடத்தினால் அனைத்தும் தீர்ந்துவிடும். இருதலைவர்களும் பேசியிருக்கிறார்கள். விரைவில் பேச்சுவார்த்தை தொடங்கும். முதல்வர் பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் தெளிவாக இருக்கிறார்கள் என்றும் அமைச்சர் வேலுமணி கூறியுள்ளார்.