அதிமுக அணிகள் இணைந்தால் 'அம்மா' மர்ம மரணத்துக்கு நீதி விசாரணை கோரும் கோஷம் அம்போவா?
அதிமுகவின் இரு அணிகளும் இணையும் நிலையில் ஓபிஎஸ் அணியின் பிரதான கோரிக்கையான ஜெயலலிதாவின் மரணத்துக்கு நீதி விசாரணை கோரும் கோரிக்கை கைவிடப்படலாம் என தெரிகிறது.
சென்னை: அதிமுக அணிகள் இணைவதற்கான பேச்சுவார்த்தைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அப்படி அதிமுக அணிகள் இணையும்போது ஓபிஎஸ் கோஷ்டி இதுவரை முன்வைத்த ஜெயலலிதாவின் மர்ம மரணத்துக்கு நீதி கோரும் விசாரணை என்னவாகும் என்ற கேள்வியை எழுப்புகின்றனர் அப்பாவி அதிமுக தொண்டர்கள்.
அதிமுகவை சசிகலா கோஷ்டி கபளீகரம் செய்து ஆட்சியையும் விழுங்க துடித்தது. இதனால் முதல்வர் பதவியில் இருந்து ஓ. பன்னீர்செல்வம் ராஜினாமா செய்ய நேரிட்டது.
இதனை ஜீரணிக்க முடியாத ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சசிகலா கோஷ்டிக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். இதனையடுத்து அதிமுக இரண்டு அணிகளாக உடைந்தது.
தினகரன் வசம் அதிமுக
சசிகலா சிறைக்குப் போன நிலையில் அவரது அக்கா மகன் தினகரன், அதிமுகவை தம் வசமாக்கினார். ஆர்கே நகர் தொகுதி இடைத் தேர்தலிலும் தம்மையே வேட்பாளராக தினகரன் அறிவித்தும் கொண்டார்.
அதிமுக முடக்கம்
அதிமுக பிளவுபட்டதால் ஆர்கே நகர் இடைத் தேர்தலுக்காக அக்கட்சியின் பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றை தேர்தல் ஆணையம் முடக்கியது. இந்த நிலையில் தற்போது சசிகலா, தினகரன் கட்டுப்பாட்டில் அல்லாத அதிமுக என்கிற கோஷம் முன்வைக்கப்பட்டு வருகிறது.
ரகசிய பேச்சுவார்த்தைகள்
இது தொடர்பாக ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி அணிகள் இடையேயான ரகசிய பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இந்த பேச்சுவார்த்தைகள் இன்றும் தொடருகின்றன. இரு அணிகளும் இணையும் நிலையில் யார் யாருக்கு என்னென்ன பதவிகள்? அமைச்சரவையில் மாற்றம் கொண்டு வரப்படுமா? என்பது குறித்தெல்லாம் தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
கைவிடப்படும் கோரிக்கை
இருப்பினும் ஓபிஎஸ் அணியைப் பொறுத்தவரையில் ஜெயலலிதாவின் மர்ம மரணத்துக்கு நீதி விசாரணை கோரி தர்ம யுத்தத்தை தொடங்கியுள்ளோம் என அறிவித்திருந்தனர். இப்போது அதிமுகவின் இரு அணிகளும் இணையும்போது ஓபிஎஸ் கோஷ்டியின் இந்த கோஷம் என்னவாகும்? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த கோரிக்கையை ஓபிஎஸ் அணி கைவிடவே அதிகம் வாய்ப்புள்ளதாகவே கூறப்படுகிறது.
அரசியலில் சகஜமப்பா!