அரசியல் நாகரீகத்தோடு ஒற்றுமையாக செயல்படுவதே பெருந்தன்மை ..ஓபிஎஸ் அணி
சலசலப்புகள் வராத அளவுக்கு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் ஓ.பி.எஸ். ஆதரவாளர் சிங்கை ராமச்சந்திரன் கூறியுள்ளார்.
மதுரை: மதுரை அதிமுக முப்பெரும் விழாவிற்கு ஓ.பன்னீர்செல்வத்தை அழைக்காததற்கு ஓ.பி.எஸ். ஆதரவாளர் சிங்கை ராமச்சந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். சலசலப்புகள் வராத அளவுக்கு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
முதலமைச்சர் பழனிசாமி மற்றும் டிடிவி தரப்பு இரட்டை இலை சின்னத்திற்கு உரிமை கோரிய நிலையில், முதலமைச்சர் பழனிசாமி அணிக்கே இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது.
மதுரை அருகே உள்ள தோப்பூரில் 100 அடி உயர கம்பத்தில் அதிமுக கொடியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை ஏற்றி வைத்தார். திருப்பரங்குன்றம் தொகுதி எம்.எல்.ஏ. ஏ.கே. போஸ் ஏற்பாடு செய்து இருந்தார். அமைச்சர்கள் சிலர் இந்த விழாவில் பங்கேற்றனர்.
இந்த விழாவுக்கு ஓ.பன்னீர் செல்வம் மற்றும் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.
ஓபிஎஸ் ஆதரவாளரான ஆஸ்பயர் சுவாமிநாதன் அதிருப்தி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முகநூலில் பதிவிட்ட அவர், " இரட்டை இலை மீட்பு மாபெரும் கொண்டாட்டமாம். முப்பெரும் விழாவாம். கட்சி கொடி ஏற்றுவார்களாம். யாருக்கும் அழைப்பு இல்லை. தகவலும் இல்லை. தலைவர்கள் உட்பட. மனங்கள் உருண்டுகொண்டுதான் இருக்கும் போல" என கூறியுள்ளார். இது இரட்டை இலை சின்னம் கிடைத்திருந்தாலும் கூட அதிமுகவில் ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பு இடையே மனக்கசப்பு இருப்பதை காட்டுவதாக உள்ளது என்று சலசலப்பை பற்ற வைத்தார்.
மாண்புமிகு அம்மா அவர்கள் வகுத்த கட்சியின் கோட்பாடுகளை யார் மீறினாலும் குற்றமே,எந்த அடிப்படை தொண்டனும் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அது அமைச்சராக இருந்தாலும் சரி. அரசியல் நாகரீகத்தோடு ஒற்றுமையாக செயல்படுவதே பெருந்தன்மை. தொண்டர்களை எதிர்த்து வென்றவர்கள் இருந்ததாக சரித்திரம் இல்லை
— Singai GRamachandran (@RamaAIADMK) November 25, 2017
இதேபோல ஒபிஎஸ் ஆதரவாளரான சிங்கை ராமச்சந்திரன் தனது ட்விட்டர் பக்கத்தில்
மாண்புமிகு அம்மா அவர்கள் வகுத்த கட்சியின் கோட்பாடுகளை யார் மீறினாலும் குற்றமே,எந்த அடிப்படை தொண்டனும் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அது அமைச்சராக இருந்தாலும் சரி. அரசியல் நாகரீகத்தோடு ஒற்றுமையாக செயல்படுவதே பெருந்தன்மை. தொண்டர்களை எதிர்த்து வென்றவர்கள் இருந்ததாக சரித்திரம் இல்லை என்று பதிவிட்டார்.
தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தை அழைக்காமல் விழா நடத்துவதற்கு கண்டனம் தெரிவித்தார். இதேபோல ஓபிஎஸ் ஆதரவாளர் மைத்ரேயனும் முப்பெரும் விழாவிற்கு முறையான அழைப்பு எதுவும் வரவில்லை என்று தனது கண்டன குரலை பதிவிட்டுள்ளார்.