வரதட்சணைக்காக மனைவியைக் கொல்ல முயன்ற சாப்ட்வேர் என்ஜீனியர் கைது
சென்னை: சென்னை, மதுரவாயல் அருகே வரதட்சனை கூடுதலாகக் கேட்டு மனைவியை கொலை செய்ய முயற்சி செய்த சாஃப்ட்வேர் என்ஜினியரையும், அவரது தாயாரையும் போலீசார் கைது செய்தனர்.
மதுரவாயல் கன்னியம்மன் நகரைச் சேர்ந்தவர் ஆனந்த், முகப்பேரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் சாஃப்ட்வேர் என்ஜினியராக உள்ளார். இவரது மாணவி நிஷா, சிறுசேரியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியையாக வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு கடந்த மே மாதம் 1-ம் தேதி திருமணம் நடைபெற்றது.
திருமணத்தின்போது ஆனந்துக்கு சீர்வரிசையாக 110 பவுன் தங்க நகையும், சீர்வரிசைப் பொருட்களும் நிஷாவின் பெற்றோர் வழங்கியுள்ளனர். இதனைத்தொடர்ந்து, கூடுதலாக வரதட்சணையாக ரூ.21 லட்சம் கேட்டு ஆனந்தும் அவரது தாயாரும் கொடுமைப்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் மாதம் 1-ம் தேதி வீட்டில் இருந்த நிஷாவிடம் வரதட்சனைப் பணம் தொடர்பாக ஆனந்த் பேசியுள்ளார். இதனால் இருவருக்குமிடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதில் வாக்குவாதம் முற்றி நிஷாவை ஆனந்த் மாடியிலிருந்து கீழே தள்ளி விட்டதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த நிஷா தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து மதுரவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆனந்தையும், அவரது தாயாரையும் கைது செய்தனர்.