“சாப்ட்வேர் பெண் வைசியா மட்டுமல்ல, பிரவீணா கொலைக்கும் வெங்கடாசலபதிதான் காரணம்”
அவர் ஏற்கனவே கல்லூரி மாணவியை கொலை செய்த தகவல் கிடைத்துள்ளது. இதுதொடர்பான விவரத்தை ஈரோடு போலீசார், வேளச்சேரி போலீசாருக்கு அளித்துள்ளனர்.
இதிலிருந்து வெங்கடாசலபதி இரண்டு இளம்பெண்களின் கொடூர கொலைக்கு காரணமாய் இருந்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.
ரயில் பாதை அருகே கொலை:
சென்னை வேளச்சேரி பெருங்குடி பறக்கும் ரயில்பாதை அருகே ரத்த காயங்களுடன் இளம்பெண் ஒருவரும், வாலிபர் ஒருவரும் கிடந்தனர். உடனடியாக வேளச்சேரி போலீசார் அங்கு வந்து ரத்த வெள்ளத்தில் கிடந்தவர்களை பார்த்தபோது இளம்பெண் இறந்து கிடந்துள்ளார். அருகில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த வாலிபரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
சாப்ட்வேர் பணியாளர்கள்:
போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், இறந்து போன இளம்பெண் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியை சேர்ந்த ஞானசேகரன் என்பவரின் மகள் வைசியா என்பதும், உயிருக்கு போராடிய நபர் திருப்பூர் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி என்பவரின் மகன் வெங்கடாசலபதி எனவும் தெரிய வந்தது.
வெங்கடாசலபதி வாக்குமூலம்:
உயிருக்கு போரடிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வெங்கடாசலபதியிடம் போலீசார், மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் வாக்குமூலத்தைப் பெற்றுள்ளனர்.இதன்படி, வைசியா தன்னுடைய மன உணர்வுகளைப் புரிந்து கொள்ளததால்தான் அவரை கொலை செய்ததாக வெங்கடாசலபதி கூறியுள்ளார்.மேலும், வைசியா, கேரளாவைச் சேர்ந்த பிரவீன் என்பவருடன் நெருங்கி பழகி வந்ததாகவும், அதனால்தான் கோபத்தில் வைசியாவை கொலை செய்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
இன்னொரு கொலை வழக்கு:
உண்மையில், ஏற்கனவே வெங்கடாசலபதி ஒரு கொலை வழக்கில் தொடர்புடையவர். ஆறு வருடங்களுக்கு முன்னால் ஜூலை 18, 2008 இல் நடைபெற்ற பிரவீணா என்ற 18 வயது பெண்ணின் கொலை வழக்கில் இவர் போலீசாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.ஆனால், விடுவிக்கப்பட்ட வெங்கடாசலபதி அதன்பின்னர்தான் சென்னைக்கு இடம் பெயர்ந்துள்ளார்.
கல்விநிலைய காதல்:
இதுபற்றி கூறிய ஈரோடு போலீசார், "திருப்பூரை சேர்ந்த வெங்கடாசலபதி கடந்த 2008 ஆம் ஆண்டு பெருந்துறை துடுப்பதியில் உள்ள ஒரு தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் எம்.எஸ்சி சாப்ட்வேர் இன்ஜினியரிங் படித்து வந்துள்ளார்.
ஒருதலைக்காதல்:
அப்போது இதே கல்லூரியில் ஈரோடு முனிசிபல் காலனியை சேர்ந்த பிரவீணா என்பவரும் படித்துள்ளார். இருவரும் ஒரே கல்லூரியில் படித்து வந்ததால் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் வெங்கடாசலபதி பிரவீணாவை காதலிக்க தொடங்கியுள்ளார். ஆனால் பிரவீணா வெங்கடாசலபதியை காதலிக்க மறுத்துள்ளார்.
கல்யாணத்திற்கு வற்புறுத்தல்:
இந்நிலையில் 2008 ஜூலை மாதம் பிரவீணா தனது தாயாருடன் வீட்டில் இருந்துள்ளார். அப்போது வெங்கடாசலபதி இவரது வீட்டிற்கு கையில் தாலியுடன் வந்துள்ளார். வீட்டில் இருந்த பிரவீணாவிடம் "திருமணம் செய்து கொள்ளலாம் வா" என்று அழைத்துள்ளார். அதிர்ச்சியடைந்த பிரவீணா திருமணத்திற்கு மறுத்துள்ளார்.
பிரவீணாவும் கொலை:
இதை அவரது தாயார் தடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வெங்கடாசலபதி கத்தியால் பிரவீணாவை குத்தி கொலை செய்ததாகவும், தடுக்க வந்த தாயாரையும் தாக்கியதாகவும் புகார் கூறப்பட்டது. இதுதொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட வெங்கடாசலபதி உரிய சாட்சிகள் இல்லாத நிலையில் விடுதலை செய்யப்பட்டார்.
அடுத்த குறி வைசியா:
அதற்கு பிறகு சென்னைக்கு சென்ற வெங்கடாசலபதி கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை செய்தபோது அங்கும் வைசியாவை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். அந்த பெண்ணையும் இப்போது கொலை செய்து விட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக வெங்கடாசலபதியிடம் போலீசார் விசாரித்தபோது ஈரோட்டில் நடந்த கொலை சம்பவத்தை கூறியுள்ளார். அதன்படி, வேளச்சேரி போலீசார் கேட்ட விவரங்களை அனுப்பி வைத்துள்ளோம்" என்று தெரிவித்தனர்.
கேள்விக்குறியான பாதுகாப்பு:
அதிகரித்து வரும் இதுபோன்ற மென்பொருள் நிறுவன குற்றங்களால், மென்பொருள் நிறுவனங்களின் பாதுக்காப்பின் மீதான சந்தேகம் மீண்டும் வலுத்துள்ளது.அதிக அளவில் ஊழியர்களை நியமிக்க ஆர்வம் காட்டும் நிறுவனங்கள், அவர்களுக்கான பாதுக்காப்பு நடவடிக்கைகளை மட்டும் கேள்விக்குறியாகவே விட்டுவிடுகின்றது என்பது குறிப்பிடத்தக்க உண்மை.