என்ஜினியர் கொலை- முக்கிய குற்றவாளி கொல்கத்தாவில் கைது- விமானம் மூலம் சென்னை கொண்டு வருகை!
சென்னை அடுத்த சிறுசேரியில் டி.சி.எஸ். என்ஜினியர் உமா மகேஸ்வரியை கொடூரமான முறையில் பலாத்காரம் செய்து கொலை செய்த மேற்கு வங்காள மாநிலத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளர்கள் உத்தம் மண்டல், ராம் மண்டல் ஆகிய இருவரையும் நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர்.
மேலும் இந்த கொலை செயலில் முக்கிய குற்றவாளியான உஜ்ஜன் மண்டல் சென்னை சென்டிரலில் இருந்து ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறி தப்பி சென்றான். ரயிலை விட்டு கொல்கத்தாவில் அவன் இறங்கும்போது கைது செய்வதற்காக சென்னையில் இருந்து தனிப்படை போலீசார் விமானத்தில் கொல்கத்தா சென்றனர்.
உஜ்ஜன் மண்டலை அடையாளம் காட்டுவதற்காக அவனோடு வேலை செய்த இன்னொரு கட்டிட தொழிலாளியையும் போலீசார் விமானத்தில் அழைத்து சென்றனர். நேற்று காலையில் கொல்கத்தா ரயில் நிலையத்தில் தனிப்படை போலீசார் காத்திருந்தனர். ரயில் வர தாமதமானது.
இதனால் போலீசார் ஒரு காரை வாடகைக்கு அமர்த்தி, ரயில் கொல்கத்தா வருவதற்கு முன்பே அவனை மடக்கிப்பிடிக்கத் திட்டமிட்டனர். அதன்படி கொல்கத்தாவில் இருந்து 10 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள காரக்பூர் சந்திப்பு ரயில் நிலையத்தில் உஜ்ஜன் மண்டலை ரயிலெயே போலீசார் மடக்கிப் பிடித்தனர்.
நள்ளிரவில் சென்னை கொண்டு வருகை
பின்னர் உஜ்ஜன் மண்டலை கொல்கத்தா கொண்டு சென்றனர். கொல்கத்தா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவனை சென்னைக்கு கொண்டு வர உரிய வாரண்டு பெற்றனர்.
நேற்று இரவு 8.50 மணிக்கு கொல்கத்தாவில் இருந்து உஜ்ஜன் மண்டலுடன் தனிப்படை போலீசார் சென்னைக்கு வரும் விமானத்தில் ஏறினர். நள்ளிரவில் அந்த விமானம் சென்னை வந்தடைந்தது.
விமான நிலையத்தில் இருந்து உஜ்ஜன் மண்டல் ரகசிய இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டான். அங்கு அவனிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இன்று உஜ்ஜன் மண்டல் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவான் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எப்படி தூக்கினர்? கொலை செய்தனர்?
இதனிடையே நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட ராம் மண்டல், உத்தம் மண்டல் ஆகிய இருவரையும் கொலை நடந்த இடத்திற்கு போலீசார் நேற்று அழைத்துச் சென்றனர். முதலில் உமாமகேஸ்வரி வேலை பார்த்த டி.சி.எஸ். மென்பொருள் நிறுவனத்துக்கு அவர்களை அழைத்துச் சென்றனர்.
உமா மகேஸ்வரியை எந்த இடத்தில் மடக்கித் தூக்கிச் சென்றனர்? எந்த இடத்தில் வைத்து அவரை பாலியல் பலாத்காரம் செய்தனர்? என்பதை அவர்கள் இருவரும் காரில் இருந்தபடியே அடையாளம் காட்டினார்கள். யார்-யார் பாலியல் பலாத்காரத்தில ஈடுபட்டது என்ற விவரத்தையும் போலீசாரிடம் அவர்கள் தெரிவித்தனர்.
கத்தி எங்கே வாங்கியது?
உமாமகேஸ்வரியின் உடலில் கழுத்து, அடிவயிறு ஆகிய இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்ததாக பிரேத பரிசோதனையில் தெரிய வந்தது. கொலைக்குப் பயன்படுத்திய கத்தியை 60 ரூபாய் கொடுத்து சிறுசேரி அருகில் உள்ள ஏகாட்டூரில் கொலையாளிகள் வாங்கி உள்ளனர். அந்த கத்தியை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும் உமா மகேஸ்வரியிடம் இருந்து அவர்கள் பறித்துச் சென்ற தோடு, மோதிரம் மற்றும் செல்போன், கிரடிட் கார்டு ஆகியவற்றையும் போலீசார் கைப்பற்றி உள்ளனர்.
கொலையாளிகள் மீது விரைவில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திகை தாக்கல் செய்து, அவர்களுக்கு அதிக பட்ச தண்டனை பெற்றுத்தர உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று, வழக்கை விசாரிக்கும் சி.பி.சி.ஐ.டி. உயர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.