கோவை வடக்கில் வாக்குகள் பதிவாகாமல் பிரச்சினை.. பல இடங்களில் வாக்கு இயந்திரங்கள் பழுது
சென்னை: தமிழகத்தில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கிய நிலையில் பல இடங்களில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பழுது காரணமாக வாக்குப் பதிவு அங்கு தாமதமாக தொடங்கியது.
காஞ்சிபுரம், திருக்கால்மேட்டில் வாக்குச் சாவடியில் வாக்கு எந்திரம் பழுது ஏற்பட்டதால் அங்கு வாக்குப் பதிவு தாமதமாக தொடங்கியது. இதேபோல விஜயகாந்த் முன்பு வெற்றி பெற்ற தொகுதியான, விருத்தாச்சலத்தில் உள்ள விஜயமாநகரில் வாக்கு எந்திரம் பழுது ஏற்பட்டது.
நாமக்கல் ஆலம்பாளையத்தில் எந்திரம் பழுது காராணமாக வாக்குப் பதிவில் தாமதம் ஏற்பட்டது. ஆரணியில் ஒரு வாக்குச் சாவடியில் எந்திரம் பழுது பிரச்சினை ஏற்பட்டது.
ஊத்தரங்கரை அரசு மேல்நிலைப்பள்ளி வாக்குச் சாவடியில் எந்திரம் பழுது ஏற்பட்டதால் அங்கு வாக்குப் பதிவு பாதிக்கப்பட்டு பின்னர் சரியானது.
சங்கரன்கோவில் தொகுதியிலும் ஒரு வாக்குச் சாவடியில் எந்திரம் பழுது ஏற்பட்டது.
கடலூர் கந்தசாமிநாயுடு கல்லூரியிலும் வாக்கு எந்திரம் பழுது ஏற்பட்டதால் தாமதமாக அங்கு வாக்குப் பதிவு தொடங்கியது.
ஈரோடு மணியக்காரன்புதூரிலும் வாக்குப் பதிவு எந்திரம் பழுது ஏற்பட்டது.
வாக்கு எந்திரங்கள் பழுதான இடங்களில் மாற்று எந்திரங்கள் கைவசம் இருந்ததால் அவற்றைப் பொருத்தி வாக்குப் பதிவு தொடர்ந்து நடக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர்.
திருவாரூர் தொகுதி புதூரில் வாக்கு எந்திரம் பழுதால் வாக்குப் பதிவு தொடங்கவில்லை. அங்கு தாமதம் ஏற்பட்டுள்ளது.
கோவை வடக்கு தொகுதியில் 147-வது வாக்குச் சாவடியில் வாக்குப் பதிவு நிறுத்தப்பட்டது. வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் பதிவாகவில்லை என்பதால் வாக்குப் பதிவு நிறுத்தப்பட்டது. பின்னர் மாற்று மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் மூலம் தற்போது வாக்குப் பதிவு மீண்டும் தொடங்கி நடந்து வருகிறது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் உள்ள 166 வாக்குச் சாவடி; தூத்துக்குடியில் உள்ள 245வது வாக்குச்சாவடிகளிலும் வாக்குப் பதிவு இயந்திரம் பழுது ஏற்பட்டு தாமதமானது.
ராசிபுரம் தொகுதிக்குட்பட்ட கூனவேனல்பட்டி வாக்குச் சாவடியிலும் வாக்கு எந்திரம் பழுது ஏற்பட்டது. நாமக்கல் தொகுதிக்குட்பட்ட சின்னாகவுண்டம்பாளையத்திலும் வாக்கு எந்திரம் பழுது ஏற்பட்டது.
போடியில் ஒரு பிரச்சினை
போடிநாயக்கனூரில் 74வது வாக்குச் சாவடியில் வாக்குப்பதிவு எந்திரங்களை வாக்குச்சாவடி முகவர் முன்னிலையில் திறக்காமல், அதிமுகவினர் முன்னிலையில் திறந்ததாகவும், பத்திரிகையாளர்களையும் அனுமதிக்கவில்லை என்றும் குற்றம் சாட்டி அரசியல் கட்சியினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.