டீன் ஏஜ் பருவத்தில் வருவது காதலா? காமமா? காதலர்களின் கவனத்துக்கு...
டீன் ஏஜ் பருவத்தில் ஏற்படும் காதலும் நல்ல காதல்தான். ஆனால் திருமணத்தில் முடிய அந்த காதல் ஜோடி கல்வி, வேலைகளில் நாட்டம் செலுத்த வேண்டும்.
Recommended Video
சென்னை: டீன் ஏஜ் பருவத்தில் ஏற்படும் காதலும் நல்ல காதல்தான், ஆனால் அது திருமணத்தில் முடிய வேண்டும் என்றால் அதற்கு சில தியாகங்களை செய்ய வேண்டும்.
இன்று காதலர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இன்றைய தினம் பீச், பார்க், தியேட்டர்கள், மால்கள் என அனைத்தும் காதலர்களால் நிரம்பி வழியும். சென்னையை பொருத்தவரை ஈசிஆர் சாலைகளில் காதல் ஜோடிகளின் வாகனங்கள் சீறி பாய்ந்து செல்லும்.
வெளிநாடுகளில் இருந்து ரோஜா பூக்கள் வந்து இறங்கியுள்ளன. காதலர்களும், காதலிகளும் தங்கள் வசதிக்கு தகுந்தாற்போல் பரிசுகளை வாங்கி தருவர். இந்த காதல் ஜோடிகளில் பள்ளி, கல்லூரிகளை கட் அடித்து விட்டு சுற்றும் டீன் ஏஜ் இளசுகளே அதிகம்.
நல்ல காதலா?
டீன் ஏஜில் வருவது நல்ல காதல் இல்லை என்றும் அது வெறும் காமம்தான் என்றும் பெரியவர்கள் மத்தியில் ஒரு கருத்து நிலவுவது உண்டு. காதலுக்கு கண் இல்லை என்றாலும் அதில் வெற்றி காண அது மட்டுமே போதாது. கல்வியும், வேலையும் தேவை.
வேலை வெட்டி இல்லை
பெரும்பாலான டீன் ஏஜ் இளசுகள் காதல் என்பது ஊர் சுற்றுவது , பைக்கில் ஒன்றாக செல்வது, ரிசார்டுகளுக்கு செல்வது என்றுதான் நினைக்கின்றனர். அதையும் தாண்டி அந்த காதலை திருமணம் அளவுக்கு கொண்டு செல்ல வேலையும், கல்வியும் அவசியம் என்பதை மறந்துவிடுகின்றனர். படிக்கும் காலத்தில் காதல் வயப்படுபவர்கள் சரியாக படிப்பதில்லை, வேலை வெட்டிக்கு செல்வதில்லை.
பெற்றோர் விரும்புவது இதுதான்
டீன் ஏஜ் பருவத்தில் வரும் காதலும் நல்ல காதலாக மாறும். எப்போது என்றால், இருவரும் படித்துவிட்டு நல்ல வேலைக்கு சென்றுவிட்டு, குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய அளவுக்கு நம் திறனை வளர்த்து கொள்ளும் வரை காதலுனுக்காகவோ காதலிக்காகவோ காத்திருந்து கரம் பிடிக்கும்போதுதான். பெற்றோர் விரும்புவதும் இதுதான். இந்த காலத்தில் பெற்றோரும் கால ஓட்டத்துக்கு ஏற்ப தங்களை மாற்றி கொண்டுதான் வருகின்றனர். பெரும்பாலும் அவர்களே முன்னின்றி மகளுக்கோ மகனுக்கோ காதலித்தவர்களையே திருமணம் செய்து வைக்கும் பக்குவம் வந்துள்ளது.
பெற்றோரை சமாதானப்படுத்துங்கள்
பெரும்பாலும் பெண் பிள்ளைகளை பெற்ற பெற்றோர் தங்கள் ஜாதியை காட்டிலும் பையன் நம் பெண்ணை வைத்து நல்ல படியாக காப்பாற்றுவானா, நல்ல பழக்கவழக்கங்கள் இருக்கிறதா அதுபோதும் என்ற நிலைக்கு வந்துவிட்டார்கள். எனவே அவசரப்பட்டு தங்கள் வாழ்க்கையை ஒன்றும் அறியாத வயதில் கெடுத்துக் கொள்ளாமல் தான் காதலித்த பெண்ணை சந்தோஷமாக வைத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பதை செய்யுங்கள். நல்ல வேலை, பெற்றோரின் ஆசி கிடைக்கும் வரை காத்திருந்தால் எந்த காதலும் தோற்று போனதாக சரித்திரம் இல்லை.