உடல் பருமன் சிகிச்சைக்காக சென்ற பெண் மரணம்.. வீட்டு வாசலில் உடலை வீசிய தனியார் மருத்துவமனை!
உடல்பருமனை குறைக்கும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழந்தார். அவரது உடலை தனியார் மருத்துவமனை வீட்டு வாசலில் வீசிவிட்டு சென்றுள்ளனர்.
சேலம் : தனியார் கல்லூரி ஒன்றில் பொறியியல் படித்து வரும் மாணவி பாக்யஸ்ரீ உடல்பருமனை குறைக்கும் சிகிச்சையில் உயிரிழ்ந்த நிலையில், அது குறித்து எந்த தகவலும் தெரிவிக்காமல் அவரது உடலை வீட்டு வாசலில் வீசிச் சென்றுள்ளனர் தனியார் மருத்தவமனையினர்.
ஓமலூரைச் சேர்ந்த சக்திவேல் அரசுப் போக்குவரத்து கழக ஓட்டுனராக உள்ளார், இவரது மனைவி மங்கையர்க்கரசி நீதிமன்றத்தில் பணியாற்றி வருகிறார். இவர்களது ஒரே மகள் பாக்யஸ்ரீ சேலம் தனியார் பொறியியல் கல்லூரியில் பொறியியல் படித்து வந்தார்.
இந்நிலையில் உடல்பருமனை குறைப்பதற்காகவும், சளி பிரச்னையை சரி செய்வதற்காகவும் கடந்த ஒரு வாரமாக சித்தோடு அருகே தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். பாக்யஸ்ரீயை அவரது பெற்றோரும் உடன் இருந்து கவனித்து வந்துள்ளனர்.
நேற்று உறவினர் ஒருவரின் சுபநிகழ்ச்சிக்கு செல்வதால் பாக்யஸ்ரீயின் உடல்நிலை குறித்து பெற்றோர் மருத்துவர்களிடம் கேட்டுள்ளனர். அதற்கு உடல்நிலையில் பிரச்னை இல்லை, சென்று வரலாம் என்று மருத்துவர்கள் கூறியதாக தெரிகிறது. இதனால் அந்த நிகழ்ச்சிக்குப் போயிருந்தனர்.
பிற்பகலில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்ட போது கூட பாக்யஸ்ரீ நன்றாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். ஆனால் சக்திவேலும், மங்கையர்கரசியும் வீடு திரும்பிய போது பாக்யஸ்ரீயின் உடல் அங்கு இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
பாக்யஸ்ரீ திடீரென உயிரிழந்தது குறித்து எந்த தகவலையும் தெரிவிக்காமல் வீட்டு வாசலில் இறந்த மாணவியின் உடலை வீசிவிட்டு சென்றுள்ளது தனியார் மருத்துவமனை. இதனையடுத்து தகவல் கேட்க மருத்துவமனையை பெற்றோர் தொடர்பு கொண்ட போதும் பதிலளிக்காததால் தங்கள் பெண்ணின் மர்ம மரணத்திற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.