கொடுமை... அம்மா, அப்பா மரணம்.. வளர்த்த தாத்தாவும் இறந்ததால் இளம்பெண் தற்கொலை!
தாய், தந்தை இறந்த நிலையில் வளர்த்த தாத்தாவும் உயிரிழந்ததால் மன வருத்தத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சென்னை : தாத்தாவின் அரவணைப்பில் வளர்ந்த பெண், அவர் இறந்துவிட்டதால் சோகம் தாங்க முடியாமல் தற்கொலை செய்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சென்னை எண்ணூர் வடக்கு பாரதியார் நகரில் வசித்து வந்துள்ளார் 18 வயது மீனா. இவருடைய தாய்-தந்தை இறந்து விட்டதால் மீனா, அதே பகுதியில் வசிக்கும் தனது தாத்தா சேதுராமன், பாட்டி பாக்கியலட்சுமி ஆகியோருடன் வசித்து வந்துள்ளார்.
கடந்த 20 நாட்களுக்கு முன்பு சேதுராமன் உயிரிழந்துள்ளார். தனது தாத்தா இறந்த துக்கம் தாங்க முடியாமல் மீனா மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். தாத்தா சேதுராமன், மீனா பெயரில் வங்கியில் பணம் போட்டு வைத்ததாகத் தெரிகிறது. பண விவகாரம் குறித்து மீனாவிடம் அவருடைய பாட்டி கேட்டதாக கூறப்படுகிறது.
கடும் மனஉளைச்சலுடன் இருந்த மீனா மனமுடைந்து, தற்கொலை செய்ய முடிவு எடுத்துள்ளார். வீட்டில் இருந்த எல்லா மாத்திரைகளையும் எடுத்து தின்றுள்ளார் மீனா. இதனால் மயங்கிய நிலையில் கிடந்தவரை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு திருவொற்றியூர் சுனாமி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி வியாழனன்று இரவு மீனா பரிதாபமாக உயிரிழந்தார். இளம்பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து எண்ணூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.