கோவையில் காதலிக்க மறுத்ததால் இளம்பெண் குத்திக் கொலை.. இளைஞர் வெறிச் செயல்!
கோவை: கோவையில் காதலிக்க மறுத்ததாக கூறி தன்யா (23) என்ற இளம்பெண் கத்தியால் குத்தி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம், அன்னூர் தென்னம்பாளையம் சாலை மாரியம்மன் கோயில் வீதியைச் சேர்ந்த சோமு- சாரதா தம்பதியின் மகள் தன்யா(23). பட்டதாரி பெண்ணான இவர் அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
இவரை கேரளாவை சேர்ந்த இளைஞர் ஒருதலை பட்சமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து 2 வருடங்களாக தன்யாவை காதலித்து வந்துள்ளார் எனவும் கூறப்படுகிறது. தன்யாவுக்கு கடந்த மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமணத்திற்கான ஏற்பாடுகளை இருவீட்டாரும் செய்து வந்தனர்.
இந்த நிலையில் தன்யா இன்று வீட்டில் தனியாக இருந்தபோது கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து அறிந்த போலீசார் விரைந்து வந்து தன்யாவின் உடலை மீட்டதுடன், கொலைக்கான காரணம் குறித்து விசாரணையில் ஈடுபட்டனர்.
போலீசார் விசாரணையில், கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஷகில் என்பவர் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை செய்கிறார். அவர் தன்யா வீட்டருகே அன்னுர் தென்னம்பாளையம் ரோடு, ஜி.கே.எஸ். பில்டிங் பின்புறம் குடியிருந்து வருகிறார். இவர் தன்யாவை ஒருதலையாக விரும்பியுள்ளார்.
இந்தநிலையில் தன்யாவுக்கு வேறொருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டதால் ஏமாற்றமடைந்த ஷகில், தன்யாவை கத்தியால் குத்திவிட்டு தப்பியுள்ளார் என தெரிய வந்துள்ளது. தப்பியோடிய ஷகிலை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் மணமகன் வீட்டார் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.