சென்னையில் ஜெயலலிதாவை நாளை சந்திக்கிறார் ஜெகன் மோகன் ரெட்டி
சென்னை: ஒருங்கிணைந்த ஆந்திரா கோரிக்கைக்கு ஆதரவு திரட்டும் முயற்சியாக தமிழக முதல்வர் ஜெயலலிதாவை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி நாளை சென்னையில் சந்திக்க இருக்கிறார்.
மறைந்த ஆந்திர முதல்வர் ராஜசேகரரெட்டியின் மகனும், ஓய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டி சொத்துக்குவிப்பு வழக்கில் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
அவர் ஆந்திராவை பிரித்து தனி தெலுங்கானா அமைக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அத்துடன் அண்மையில் டெல்லி சென்று பாரதிய ஜனதா, இடதுசாரி தலைவர்களையும் நேரில் சந்தித்து பேசினார் ஜெகன். அதேபோல் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியையும் நேரில் சந்தித்து தெலுங்கானாவுக்கு ஒப்புதல் தர வேண்டாம் என்று வலியுறுத்தினார்.
பின்னர் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை ஆகியோரையும் ஜெகன் மோகன் ரெட்டி நேரில் சந்தித்து ஆதரவு திரட்டினார்.
இந்நிலையில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க சி.பி.ஐ., நீதிமன்றத்தில் சிறப்பு அனுமதியை ஜெகன்மோகன்ரெட்டி பெற்றுள்ளார்.
ஹைதராபாத்தில் இருந்து விமானம் மூலம் நாளை சென்னை வரும் ஜெகன் மோகன் ரெட்டி, தலைமை செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பின் போது ஒருங்கிணைந்த ஆந்திராவுக்கு ஆதரவு கோரியும் தெலுங்கானா மசோதாவுக்கு நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றும் ஜெகன் வலியுறுத்துவார் என்று தெரிகிறது.