"அம்மா அழைப்பு மையம்”.. குறைகளை தொலைபேசி மூலம் சொன்னால் தீர்த்து வைப்பார்களாம்.!
சென்னை: தமிழகத்தில் பொதுமக்களின் குறைகளை தொலைபேசி மூலம் நேரடியாக பதிவு செய்யும் வகையிலான டெலிபோனிக் கேர் மையத்தினை முதல்வர் ஜெயலலிதா இன்று காணொளிக் காட்சி மூலம் துவங்கி வைத்தார்.
பொதுமக்களின் குறைகளைத் தீர்க்க ‘‘அம்மா அழைப்பு மையம்'' என்ற திட்டத்தை இன்று முதல் செயல்படுத்தியுள்ளது தமிழக அரசு. இந்த மையத்திற்கு 1100 என்ற இலவச எண் தரப்பட்டுள்ளது. இந்த நம்பரை எளிதாக மனதில் வைத்துக் கொள்ளலாம். எந்த இடத்தில் இருந்தும் இந்த நம்பரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.
அந்தக் குறை சம்பந்தப்பட்ட துறைக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்படும். அதற்கு உடனடியாகத் தீர்வு காணப்பட்டு குறையை பதிவு செய்தவருக்கு பதிலளிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்தப் புதிய திட்டத்தை இன்று பிற்பகல் 12.30 மணியளவில் தலைமைச் செயலகத்தில் காணொளி காட்சி மூலமாக முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்துள்ளார். முதல்கட்டமாக இந்த மையத்தில் 138 அழைப்பு ஏற்பாளர்கள், நாளொன்று15,000 அழைப்புகளைப் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.