திருமணம் செய்து மோசடி: டிவி நடிகை மீது 2 கணவர்கள் மனு - எழும்பூர் கோர்ட்டில் சரணடைந்த நடிகை
சென்னை: முதல் திருமணத்தை மறைத்து மோசடி செய்ததோடு சொத்துக்களை அபகரிக்க முயற்சி செய்தததாக சின்னத்திரை நடிகை சுபஸ்ரீ மீது அவரது இரண்டு கணவர்களும் மனு தாக்கல் செய்துள்ள சம்பவம் பரபரப்பு எற்பட்டுள்ளது. முதல் கணவர் தொடர்ந்த வழக்கில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டதை அடுத்து சென்னை, எழும்பூர் நீதிமன்றத்தில் டிவி நடிகை சுபஸ்ரீ சரணடைந்தார்.
சென்னையைச் சேர்ந்தவர் சுபஸ்ரீ, 33, இவர் சன் டிவியில் ஒளிபரப்பான சொந்தம் பந்தம் சீரியலிலும், தற்போது ஒளிபரப்பாகி வரும் கல்யாண பரிசு சீரியலிலும் நடித்து வருகிறார். சுபஸ்ரீக்கும், மன்னார்குடியைச் சேர்ந்த சரணவன் என்பவருக்கும், 2007 மே, 25ல் திருமணம் நடந்தது. அவர்களுக்கு, ஏழு வயதில் மகள் உள்ளார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சுபஸ்ரீக்கும், சரவணனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து சரவணன் மீது தாம்பரம் மகளிர் போலீசில் சுபஸ்ரீ வரதட்சணை புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில் சரணவன், சென்னை, எழும்பூர், 13வது குற்றவியல் நீதிமன்றத்தில், தன் மனைவி சுபஸ்ரீ மீது மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் அவர், நான் பி.இ., படித்துள்ளேன். சிங்கப்பூரில், மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறேன். சென்னை, தாம்பரத்தில் எனக்கும், டிவி நடிகை சுபஸ்ரீ என்பவருக்கும், 2007ல் திருமணம் நடந்தது.
திருமணத்திற்கு பின், சில மாதங்களிலேயே சுபஸ்ரீயின் சுயரூபம் தெரிய துவங்கியது; என் சொத்தை அபகரிக்கும் நோக்கில் செயல்பட்டார். அதற்கு, அவரது குடும்பத்தாரும் உடந்தையாக இருந்தனர். மேலும் நானே வீட்டை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டேன். என் மீது தாம்பரம் மகளிர் போலீஸ்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரை திரும்ப பெறுவதற்கு பணம் தர வேண்டும் என்று மிரட்டுகிறார்.
இந்நிலையில், என் மனைவி சுபஸ்ரீ, சென்னை, மாதவரத்தைச் சேர்ந்த, மென்பொருள் பொறியாளர் சீனிவாசன் என்பவரை, இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார் என அறிகிறேன். சட்டவிரோதமாக திருமணம் செய்த சுபஸ்ரீக்கு, தக்க தண்டனை வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்த மனு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, மாஜிஸ்திரேட் கோபிநாத் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, 'சுபஸ்ரீ நேரில் ஆஜராக வேண்டும்' என, சம்மன் அனுப்பும்படி உத்தரவு பிறப்பித்தார். பலமுறை சுபஸ்ரீக்கு சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. இதனால் அவருக்கு, பிடிவாரண்ட் பிறப்பித்து, மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
இந்த வழக்கு, நேற்று காலை, எழும்பூர், 13வது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கோபிநாத் முன் விசாரணைக்கு வந்த போது, நடிகை சுபஸ்ரீ சரணடைந்தார். அவர், வழக்கு விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிப்பதாகவும், பிடிவாரன்டை ரத்து செய்ய வேண்டும் எனவும் மனு தாக்கல் செய்தார். இதையேற்ற மாஜிஸ்திரேட் கோபிநாத், பிடிவாரண்டை ரத்து செய்தார். மேலும் வழக்கு விசாரணையை, ஜூலை, 5க்கு தள்ளி வைப்பதாகவும் தெரிவித்தார்.
2வது கணவரும் மனு
நடிகை சுபஸ்ரீ தன்னையும் ஏமாற்றிவிட்டதாக அவரது, 2வது கணவர் சீனிவாசனும், எழும்பூர் நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார். அவர் தனது மனுவில், அமெரிக்கா நிறுவனம் ஒன்றில், மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வருகிறேன். கருத்து வேறுபாடு காரணமாக, 2011ல், மனைவியை பிரிந்து இருந்தேன். அப்போது, என் மகனும், சுபஸ்ரீயின் மகளும், ஒரே பள்ளியில் படித்தனர். அப்போது, சுபஸ்ரீயுடன் பழக்கம் ஏற்பட்டது.
கணவரை விவாகரத்து செய்து விட்டதாக கூறினார். நானும், மனைவியை பிரிந்து இருந்ததால் நெருக்கமாக பழகத் துவங்கி பின்னர் திருமணம் செய்து கொண்டோம்.
மூன்று மாதங்களுக்கு பின், என் சொத்தை அபகரிக்கும் நோக்கில் சுபஸ்ரீ செயல்பட்டார். அவரது பிடியில் இருந்து விலகினால் போதும் என்றாகி விட்டது. என் மீது பொய் புகார் அளித்து சிறையில் தள்ளினார். தற்போதும், என் சொத்தை அபகரிக்க மிரட்டல் விடுத்து வருகிறார் என்று கூறியுள்ளார். இந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ளது.
முதல் கணவர் தொடுத்த வழக்கில் பிடிவாரண்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட தொலைக்காட்சி நடிகை சுபஸ்ரீ எழும்பூர் நீதிமன்றத்தில் நேற்று சரண் அடைந்தார். 2வது கணவரும் நடிகை சுபஸ்ரீ மீது மோசடி வழக்கு தாக்கல் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.