காலாவதியான கலைஞர் டிவி... நெருப்பில் எரிந்து நாசம் - வீடியோ
கடந்த திமுக ஆட்சி காலத்தில் வாங்கப்பட்டு, மக்களிடம் கொடுக்க முடியாமல் விழுப்புரம் வேளாண் விற்பனை மைய குடோனில் வைக்கப்பட்டிருந்த இலவச தொலைக்காட்சிகள் எரிந்து நாசமாகின.
விழுப்புரம்: வேளாண் விற்பனை மைய குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் அங்கு வைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான இலவச தொலைக்காட்சி பெட்டிகள் தீ விபத்தில் வெடித்துச் சிதறியதால் பரபரப்புஏற்படது.
விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூட குடோனில் திமுக ஆட்சிக் காலத்தில் மக்களுக்கு இலவசமாக வழங்கப்படவிருந்த ஆயிரம் இலவச தொலைக்காட்சி பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன.
கடந்த 2006-2011 ஆம் ஆண்டு காலகட்டத்தில் மக்களுக்கு தொலைக்காட்சி பெட்டிகள் வழங்கிக் கொண்டிருந்த நிலையில் மீண்டும் சட்டமன்ற தேர்தல் வந்ததால், டிவி விநியோகம் செய்யும் பணி நிறுத்தப்பட்டதால் தொலைக்காட்சி பெட்டிகள் அங்கு வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் அங்கு வைக்கப்பட்டிருந்த தொலைக்காட்சி பெட்டிகள் அனைத்தும் வெடித்து சிதறியுள்ளன. இதனால் ஏற்பட்ட சத்தம் மற்றும் கரும்புகையால் அதிகாலையில் உறங்கிக் கொண்டிருந்த மக்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த விழுப்புரம் தீயணைப்புத்துறை அதிகாரிகள் 2 வாகனங்களில் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தொலைக்காட்சி பெட்டிகள் எரிந்து அதிகளவு கரும்புகை வெளியேறியதால் தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டது.
எனவே ஜேசிபி மூலம் கட்டடத்தின் சுவரை இடித்து உள்ளே சென்ற வீரர்கள் 6 மணி நேரத்திற்கும் மேலாகப் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த விபத்தில் தீயில் எரிந்த தொலைக்காட்சி பெட்டிகளின் சேத மதிப்பு ரூ.40 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.