அமெரிக்காவில் விபச்சாரத்தில் ஈடுபட்ட தெலுங்கு, கன்னட சினிமா நடிகைகள்.. ஏஜென்ட் தம்பதி கைது
வாஷிங்டன்: நிகழ்ச்சிகளில் பங்கேற்க செல்வதாக கூறிக்கொண்டு அமெரிக்கா சென்று சில தெலுங்கு மற்றும் கன்னட சினிமா நடிகைகள் விபச்சாரத்தில் ஈடுபட்ட தகவல் அம்பலமாகியுள்ளது.
தெலுங்கு திரையுலகில் சிறு அளவில் தயாரிப்பாளராக இருப்பவர் கிஷான் மோடுகுமுடி என்ற ஸ்ரீராஜ் சென்னுபட்டி, அவரது மனைவி சந்திரகலா பூர்ணிமா என்ற வேபா ஜெயம் (31) ஆகியோர்தான் அமெரிக்காவில், நடிகைகளுக்கு ஏஜென்டுகளாக செயல்பட்டது அம்பலமாகியுள்ளது.
இதில் அதிர்ச்சியளிக்கும் விஷயம் என்னவென்றால், ஹைதராபாத்தை சேர்ந்த இந்த தம்பதிகள், அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கியுள்ளது அம்பலமாகியுள்ளது. இதுதொடர்பாக கடந்த ஏப்ரல் 28ம் தேதி இவர்களை அமெரிக்க ஹோம்லேன்ட் செக்யூரிட்டி விசாரணை அமைப்பு கைது செய்திருந்தது.
கிரிமினல் வழக்கு
இந்த தம்பதிகளிடம் நடத்திய விசாரணையில், இவர்கள் இதுவரை சுமார் 5 நடிகைகளை வைத்து விபச்சாரம் செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, தம்பதிகள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மே 11ம் தேதி முதல், கடந்த ஜனவரி 22ம் தேதிவரை இவர்கள் நடிகைகளை வைத்து அமெரிக்காவின் பல இடங்களிலும் விபச்சாரம் நடத்தியதாக அதிகாரிகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த புகாரில் தெரிவித்துள்ளனர்.
வீடு, ஹோட்டல்கள்
சிகாகோவிலுள்ள தம்பதிகளின் வீட்டில் வைத்தோ, அல்லது அமெரிக்காவின் பல நகரங்களிலும் உள்ள ஹோட்டல்களில் வைத்தோ இந்த விபச்சாரம் நடந்துள்ளது. தெலுங்கு அல்லது பிற இந்திய சார்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை போல நடிகைகளை வர வைத்து அமெரிக்காவிலுள்ள வாடிக்கையாளர்களிடம் அவர்களை கைமாற்றிவிடுவது இந்த தம்பதிகள் வேலை. நடிகைகள் வரும் விமான டிக்கெட், ஹோட்டல் தங்கும் வாடகை உள்ளிட்ட அனைத்துமே தம்பதிகள் செலவுதான்.
வசூல் வேட்டை
அமெரிக்க வாழ் இந்தியர்கள்தான் இந்த நடிகைகளின் கஸ்டமர்கள். அவர்களிடம் 1000 டாலர் முதல் 3000 டாலர் வரை, ஒருமுறை உறவுக்கான கட்டணமாக வசூலிக்கப்பட்டுள்ளது. தம்பதிகளின் வீட்டை போலீசார் சோதனை போட்டபோது, அங்கே 70 ஆணுறைகளை பறிமுதல் செய்தனர். பூட்டி வைக்கப்பட்ட பல பேக்குகளும் அங்கே இருந்தன. ஹோட்டல் ரெக்கார்டுகள், டிக்கெட் புக்கிங் செய்யப்பட்ட விவரங்கள் என அனைத்து ஆதாரங்களையும் அமெரிக்க விசாரணை ஏஜெஎன்சிகள் திரட்டிவிட்டன.
விசா சிபாரிசு
அமெரிக்க தெலுங்கு சங்கம், ஹைதராபாத்திலுள்ள அமெரிக்க கவுன்சல் ஜெனரலுக்கு எழுதிய சில கடிதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதில், சில தனிப்பட்ட நபர்களுக்கு விசா அளிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாம். இதனால், இந்த பாலியல் ஜாலத்தின் பின்னணியில் வேறு சிலரும் இருக்கலாமோ என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை நடத்தி வருகிறார்கள்.