'போன வைடா..." விவகாரம்: சீமானை தே.பா. சட்டத்தில் கைது செய்யக் கோரி தேனியில் போராட்டம்
தேனி: தெலுங்கு இன மக்களை இழிவுபடுத்தி பேசியதற்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யக் கோரி தேனியில் தெலுங்கு சமுதாய கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய சீமான், மதுரையில் உள்ள திருமலை நாயக்கர் மகால் தமிழர்களின் அவமான சின்னம் என்று விமர்சித்திருந்தார். மேலும் வீரபாண்டிய கட்டபொம்மனையும் சாடி பேசினார்.
இதனைத் தொடர்ந்து தேனியைச் சேர்ந்த ஜெகதீஸ் என்ற இளைஞர் சீமானை போனில் தொடர்பு கொண்டு இது குறித்து பேசினார். இந்த உரையாடலின் போது ஆவேசமடைந்த சீமான், "போனை வைடா...ங்....தா" என கூறுவதாக ஒரு ஆடியோ சமூக வலைதளங்கள், வாட்ஸ் அப்பில் பரவியிருந்தது.
இதன் பின்னர் ஜெகதீஸ் என்ற அந்த இளைஞரை நாம் தமிழர் கட்சியினர் அடித்து மண்டையை உடைத்தனர். இதற்கு கண்டனம் தெரிவித்து சீமான் வீட்டை சென்னையில் முற்றுகையிடும் போராட்டத்தை நாயுடு சங்கத்தினர் அண்மையில் நடத்தினர்.
இந்நிலையில் சீமானை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய கோரி தெலுங்கு சமுதாய கூட்டமைப்பு சார்பில் தேனியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சியை தடை செய்ய வேண்டும் என்றும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில் இந்துமக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் மற்றும் தெலுங்கு சமூகப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.