சுடும் சூரியன்.... சதமடித்த வெப்பநிலை - இளநீர், பதநீர் விற்பனை படுஜோர்
தமிழகத்தில் பல்வேறு நகரங்களில் வெயில் அதிகரித்து வரும் நிலையில், மதுரை மற்றும் சேலத்தில் நேற்று 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகி உள்ளது.
சேலத்தில் நிலவிவரும் கடும் வெயிலை சமாளிக்க முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். இதனால் வெயில் காலத்தில் விற்கப்படும் குளிர்பானம் உள்ளிட்ட பொருட்களின் விற்பனையும் சூடுபிடித்துள்ளது.
கோடை காலம் ஆரம்பித்ததன் தொடக்கமாக இந்த மாதத்தின் ஆரம்பத்தில் இருந்தே வெயில்வாட்டி வதைக்க தொடங்கியுள்ளது. வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் தர்பூசணி, இளநீர், நுங்கு, குளிர்பான கடைகள் ஐஸ்கிரீம் கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
இந்திய வானிலை மையம்
நடப்பாண்டு கோடையில் வெப்பம் அதிகரிக்கும், முந்தைய ஆண்டுகளில் நிலவிய வழக்கமான வெப்ப நிலையை விட சற்று அதிகமாக (0.5 டிகிரி செல்சியஸ்) இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை மையம்
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலசந்திரன் இந்திய வானிலை ஆய்வு மையம் ஒவ்வொரு ஆண்டும் பருவமழைக்கு முந்தைய (மார்ச்-மே) மாதங்களில் நிலவும் வெப்பநிலை குறித்து அறிக்கை வெளியிடுவது வழக்கம்.
அதிகரிக்கும் வெப்பநிலை
அதன்படி தமிழகத்தில் மார்ச் முதல் மே மாதம் வரையிலான காலகட்டத்தில் அதிகபட்ச வெப்பநிலையானது, முந்தைய ஆண்டுகள் அதே காலகட்டத்தில் இருந்த வழக்கமான வெப்ப நிலையை விட 0.5 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்று கணித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம், அதிகபட்ச வெப்பநிலை தொடர்பாக தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இயல்பை விட உயரும் பட்சத்தில் அதுகுறித்து தெரிவிக்கப்படும் என்றார்.
தகிக்கும் கோடை
சேலத்தில் வழக்கத்தை விட வெயில் சுட்டெரிப்பதால் பகல் நேரங்களில் சாலைகளில் வாகனப் போக்குவரத்து வெகுவாக குறைந்துள்ளது. கோடை காலத்திற்கு ஏற்ப உணவுப் பழக்கவழக்கங்களை பொதுமக்கள் மாற்றிக் கொள்ள வேண்டுமென மருத்துவர்களும் அறிவுறுத்தத் தொடங்கியுள்ளனர்.
சதமடித்த வெப்பநிலை
ஞாயிறுக்கிழமையான நேற்று அதிகபட்சமாக மதுரை, சேலத்தில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. மேலும் தருமபுரியில் 97.88, திருத்தணி, கரூர் பரமத்தி வேலூரில் தலா 97.7, வேலூரில் 97.34 டிகிரி பாரன்ஹீட் பதிவாகியுள்ளது.
95 டிகிரியை தாண்டிய வெப்பம்
மதுரையில் இன்று 96 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. சேலத்தில் இன்று 97 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையும், சென்னையில் 88 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது. கோவையில் 96 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
வறண்ட வானிலை
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் வறண்ட வானிலை நிலவும். சென்னை உட்பட தமிழகத்தின் சில இடங்களில் அதிகாலை நேரங்களில் பனிப்பொழிவு இருக்கக்கூடும். சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.