குழித்துறை கோவில் யானை கோபாலன் மரணம்- பக்தர்கள் அஞ்சலி!
நாகர்கோவில் : குமரி மாவட்ட தேவஸ்தான போர்டுக்கு சொந்தமான யானை கோபாலன் உடல்நலக்குறைவால் மரணமடைந்த சம்பவம் அங்கு பெரும் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது.
கேரளாவில் இருந்து சிறு வயதில் குமரி மண்ணிற்கு வந்து சுமார் 54 வருடங்களாக குமரி வீதிகளில் சிறப்புமிக்க சுவாமி விக்கிகிரங்களை சுமந்து ராஜ நடை போட்டு வந்த குழித்துறை கோவில் யானை கோபாலன் உடல் நல குறைவால் மரணம் அடைந்தது.
கன்னியாகுமரியில் தேவசம்போர்டு கட்டுப்பாட்டில் 300க்கும் மேற்பட்ட இணைக்கப்பட்ட, இணைக்கப்படாத திருக் கோவில்கள் உள்ளன.
50ஆண்டுகளுக்கு முன்னர் இந்த கோயில்களுக்காக மூன்று யானைகள் ஆலய பயன் பாட்டிற்காக இருந்தது. இதில் இரண்டு யானைகள் இறந்ததைத் தொடர்ந்து இறுதியாக 64 வயதுடைய கோபாலன் என்ற ஆண் யானை மட்டுமே பணியாற்றி வந்தது.
இந்த யானையும் கடந்த சில நாட்களாக நோய்வாய்பட்டு அவதிப்பட்டு வந்த நிலையில் முன்தினம் மாலையில் இறந்தது.அதனைத்தொடர்ந்து யானையின் உடலுக்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் வனத்துறை அதிகாரிகள் முன்னிலையில் கால்நடைத்துறை மருத்துவர்கள் யானையின் உடலை மருத்துவ பரிசோதனை செய்தனர். பின்னர் கிரேன் மூலம் யானை உடல் தகன மேடையில் வைக்கப்பட்டு 20 டன் விறகு, தேங்காய் சவுரி, சீனி, சிரட்டை போன்றவை தகன மேடையில் வைக்கப்பட்டு எரியூட்டப்பட்டது.