அரியவகை ஆடுகள், வித விதமான குதிரைகள், வகை வகையான மாடுகள்.. கலகலக்கும் அந்தியூர் சந்தை!
குதிரைகள், மாடுகள், ஆடுகள் விற்பனைக்காக சந்தைக்கு வந்துள்ளன.
Recommended Video
அந்தியூர்: அரியவகை ஆடுகள், வித விதமான குதிரைகள், வகை வகையான மாடுகள் என விற்பனைக்காக நிறுத்தப்பட்டு, அந்தியூரை அலங்கரித்து வருகின்றன.
அந்தியூரில் குருநாதஸ்வாமி கோவில் உள்ளது. இந்த கோயிலில் ஆடிப்பெருந் தேர்திருவிழா கடந்த புதன் கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கோயிலில், மூங்கில் தட்டிகளால் 60 அடி நீளத்திற்கு மகமேரு தேர்கள் செய்வர். இதில், குருநாதசுவாமி, பெருமாள், காமாட்சியம்மன் சாமிகள் அமர வைக்கப்படுவார்கள். பின்னர் பக்தர்கள் இதனை தோளில் சுமந்து செல்வர். அதாவது மடப்பள்ளியிலிருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வனக்கோயிலுக்கு எடுத்து சென்று அங்கு சிறப்பு பூஜைகள் நடத்தி வழிபடுவர்.
புகழ்பெற்ற குதிரை சந்தை
இதனையொட்டி 4 நாட்கள் குதிரை சந்தை, மாட்டுச்சந்தை நடக்கிறது. இந்த சந்தைகள் இந்திய அளவில் புகழ்பெற்றது. இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய குதிரை மற்றும் மாட்டு சந்தை என பெயர் பெற்றது இந்த அந்தியூர் சந்தைதான். இதில் வந்த குதிரைகளில் மார்வார், கத்தியவார், இங்கிலீஸ் பீட் என உயர்ரக குதிரைகள் ஆயிரக்கணக்கில் விற்பனைக்கு குவிந்துள்ளன. இதன் உயரம், நிறம் மற்றும் சுழிகளை வைத்து விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. சில ஆயிரம் முதல் பல லட்சம் ரூபாய் விலை மதிப்பிலான குதிரைகள் கொண்டு வரப்பட்டு விற்பனைக்காக காத்திருக்கின்றன.
பல வகை மாடுகள்
மேலும் மாடுகளில் காங்கேயம், ஆந்திரா வகை ஓங்கோல் இனம், ராஜஸ்தான், குஜராத், பஞ்சாப் இன நாட்டு மாடுகள், முறா இன எருமைகள்,பர்கூர் இன செம்மறை மாடுகள், சிந்து மாடுகள் வந்துள்ளன. இவை ரூ 10 ஆயிரம் முதல் ரூ 3 லட்சம் வரை மதிப்புள்ளவைகளாக, பல ஆயிரக்கணக்கில் விற்பனைக்கு வந்துள்ளது.
கால்நடைகளின் அணிகலன்கள்
பாலுக்காகவும், இறைச்சிக்காகவும், அழகுக்காகவும் வளர்க்கப்படும் அரியவகை ஆடுகள், சண்டைக்கிடாய்கள், பறவைகளும் விற்பனைக்கு வந்துள்ளன. மேலும் விவசாயத்திற்க்கு பயன்படுத்தப்படும் மாட்டு வண்டிகள், குதிரை வண்டிகள், கால்நடைகளை அலங்கரிக்கும் அணிகலன்கள், இயந்திரங்கள் என பலவகைகள் வந்துள்ளன.
நாட்டிய குதிரைகள்
பார்வையாளர்களை கவரும் வகையில் நாட்டிய குதிரைகள், ரேஸ் குதிரைகள், ராட்டின தூரிகள், ஜீப் கார்களின் கண்காட்சி என மக்களை பரவசப்படுத்தும் பல்வேறு வகையான பொழுதுபோக்கு அம்சங்கள் இடம் பெற்றுள்ளது. இத்திருவிழாவை காண தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், கர்நாடக, ஆந்திரா, கேரளா, ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட வெளிமாநிலங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் குவிந்துள்ளனர் .