கோவில் கதவை உடைத்து ரூ. 30,000 பணத்தோடு உண்டியலைத் தூக்கிச் சென்ற திருடர்கள்!
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் கோவில் கதவை உடைத்து ரு. 30 ஆயிரம் பணத்துடன் உண்டியலைத் தூக்கிச் சென்ற திருடர்களைப் போலீசார் தேடி வருகின்றனர்.
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகேயுள்ளது ஆம்பலாப்பட்டு. அங்கு தெற்குத் தெருவில் மந்தை வீரனார் கோவில் உள்ளது.
இந்தக் கோவிலுக்குல் இரும்பு கம்பி கதவு அருகே உண்டியல் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. அதில் பக்தர்கள் காணிக்கையாக அளித்த பணம் ரூ. 30 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு பூட்டை உடைத்து கோவிலுக்குள் நுழைந்த மர்மநபர்கள், அங்கிருந்த உண்டியலை அப்படியே தூக்கிச் சென்றுள்ளனர்.
நேற்று காலை கோவிலின் கதவு உடைக்கப்பட்டு உண்டியல் காணாமல் இருப்பதை கண்டு, அதிர்ச்சி அடைந்த மக்கள் பாப்பாநாடு போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் தடயங்களைச் சேகரித்தனர். கோவில் உண்டியலை பணத்துடன் திருடிச் சென்ற திருடர்களையும் அவர்கள் வலைவீசித் தேடிவருகின்றனர்.