புத்தாண்டு நள்ளிரவில் கோயில்களை திறக்கலாமா? ஆகமும், விஞ்ஞானமும் சொல்வது என்ன?
புத்தாண்டு நள்ளிரவில் கோயில்கள் திறப்பு ஆகம விதிகளுக்கு எதிரானது என்று கூறியுள்ள ஹெச்.ராஜா, இதற்கு அரசு தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
Recommended Video
சென்னை: சமூகவலைதளத்தில் தனது கருத்தை தெரிவித்துள்ள ஹெச்.ராஜா, புத்தாண்டு இரவில் கோயில்கள் திறப்பது, ஆகம விதிகளுக்கு எதிரானது எனக்கூறியுள்ளார்.
ஆங்கில புத்தாண்டு பிறக்கும் ஒவ்வொரு முறையும் இந்த பிரச்சனை தலைத்தூக்கத்தான் செய்யும், ஆனால் பெரும்பான்மையானோர் இந்த கருத்தை ஏற்றுக்கொள்ள மறுப்பதால் இந்த பிரச்சனை எழுப்பப்பட்ட வேகத்திலே கரைந்தும் போய்விடுகிறது.
பொதுவாக புத்தாண்டு கொண்டாட்டம் என்பதை நாம் நான்கு வகையாக பிரித்து வைத்திருக்கிறோம். ஒன்று கடற்கரைக்கு சென்று மக்களோடு கொண்டாடுவது, இரண்டுவது கோயிலுக்கு சென்று கடவுளோடு கொண்டாடுவது, மூன்றாவது உற்சாக பானத்தோடு உற்சாகமாக நண்பர்களோடு கொண்டாடுவது, நான்காவது எதைப்பற்றியும் கவலைப்படாம் தூங்குவது. இதில் எப்போதும் எதிர்ப்பு கிளம்புவது இரண்டாவது கொண்டாட்டத்திற்கு தான்.
மக்களின் நம்பிக்கை
பிறக்கும் புத்தாண்டிலாவது பிரச்சனையில்லாத வாழ்க்கை வேண்டும் என்பதற்காகவே பலரும் குடும்பத்துடன் இரவு சாமி தரிசனம் செய்வதுண்டு. ஆனால் பெருங்கூட்ட நெரிசலில் வரிசையில் பல மணி நேரம் காத்துக்கொண்டிருக்கும் மக்களுக்கு முன், சரியாக 12 மணிக்கு புத்தாண்டு பிறக்கும் போது தரிசனம் செய்வது என்னமோ விவிஐபிகள் மட்டும் தான்.
திறக்கப்படும் கோயில் நடை
புத்தாண்டு இரவில் கோயில்களை திறக்கும் கலாச்சாரம் என்பது உண்மையில் கடந்த சில ஆண்டுகளாக தான் இருந்து வருவதாக கருதப்படுகிறது. அதற்கு முன்பெல்லாம் காலையில் எழுந்து கோயில் போவது தான் வாடிக்கை. அதுவும் இந்த செயல்பாடுகள் கூட நகரப்பகுதிகளில் தான். கிராமப்பகுதிகளில் எப்போது பொங்கலும், தீபாவளியும், கோயில் திருவிழாக்களும் தான் பிரதானம்.
ஆன்மீகமும்.. விஞ்ஞானமும்..
கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் என சம்பந்தப்பட்ட மதத்தினருக்கு அவை ஒரு மன அமைதியை தரும் தங்களின் இஷ்ட தெய்வம் வாழும் இடமாகவும், மதத்தின் அடையாளமாக கருதப்படுகிறது. ஆனால் அறிவியலுக்கும், விஞ்ஞானத்திற்கும் அனைத்தும் சமம் தான். மனித இனமே விஞ்ஞானத்துக்கு சிறுபான்மையினர் தான்.
ஆகம விதிகள்
கோயிலின் கட்டமைப்புகள், அதில் வைக்கப்படும் சிலைகள், அதில் செய்யப்படும் பிரதிஷ்டைகள் அந்த இடத்தை ஒரு பவர் சென்டராக மாற்றி விடுவதாக கூறுகிறது விஞ்ஞானம். அதை எப்படி பவர் சென்டர்களாக மாற்றுவது என்பதை கூறுவது ஆகமவிதி. ஒரு கோயிலை எப்படி கட்ட வேண்டும், எந்த இடத்தில் கட்ட வேண்டும், எதை வைத்து கட்ட வேண்டும், என்ன செய்யவேண்டும் என்பதை கூறுவதும், எதை வைத்து கட்டக்கூடாது, எந்த இடத்தில் கட்ட கூடாது, எப்படி கட்டக்கூடாது, என்ன செய்யக்கூடாது என்று கூறுவதும் தான் ஆகம விதிகள்.
பழங்கால கோயில்
இந்த ஆகம விதிப்படி கோயில்களை கட்டுவது ஒரு தனிக்கலையாக நம் பழங்காலத்தில் கருதப்பட்டது. இதற்காக அப்போது பல நிபுணர்கள் இருந்ததாக கூறப்படுகிறது. தஞ்சை பெரியகோயில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோயில் உள்ளிட்ட கோயில்கள் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பு ஆகம விதிப்படி கட்டப்பட்டன. ஆனால் தற்போது சில தசாண்டுகள் முன்பு கட்டப்பட்ட பல கோயில்கள் இவ்வகையான ஆகம விதிகளின் படி கட்டப்படுவதில்லை. காரணம் அதற்கான நிபுணத்துவம் படைத்தவர்கள் பெரும்பாலும் இப்போது இல்லை.
சக்தியை உணர முடியும்
ஆகமவிதியை நம்மாலும் உணர முடியுமா?... முடியும்! பழங்கால கோயில்களில் சாமி தரிசனம் செய்தபின்னும், தற்போது கட்டப்பட்ட கோயில்களை சாமி தரிசனம் செய்தபின்னும் நம் உடலிலும் மனதிலும் ஏற்படும் மாற்றமே ஆகம விதியின் வெளிப்பாடுகளில் ஒன்றுதான்.
கோயிலில் உள்ள சக்தி
ஆன்மீகத்தின் படி கோயிலுக்கு சென்று வந்தால் மனம் சாந்தமடையும் என்பார்கள். அதற்கு ஒரு விளக்கமுண்டு, அண்டசராசரத்தில் இருக்கும் உடலுக்கு நன்மை தரக்கூடிய காஸ்மிக் கதிர்களை, இரிடியமால் ஆன கோயில் கோபுர கலசங்கள் உள்வாங்கி, அதனை கர்ப்ப கிரகத்தின் வழியாக சிலைக்கு செலுத்துவதாகவும், அந்த சிலையிலிருந்து வெளியேறும் கதிர்கள் காஸ்மிக் கதிர்களை நமக்கு சேர்ப்பதாகவும், அதன் காரணமாகவே நமக்குள் மாற்றம் ஏற்படுவதாகவும், இந்த காஸ்மிக் கதிரால் தான் கர்ப்பகிரகம் சூடாக இருப்பதாக கருதப்படுகிறது.
மார்டன் கோயில்கள்
தற்போது உள்ள மார்டன் கோயில்களில் இந்த விதிகள் பின்பற்றப்படுவதில்லை. கர்ப்பகிரகத்திற்குள் ஏசி, பேன், மின்சார விளக்கு, மணியைக்கூட கையில் ஆட்டாமல் மின்சார மணி, கர்ப்பகிரகத்திற்குள் ஓட்டைப்போட்டு அபிஷேகத்திற்கு தண்ணீர் வசதி என்று காலத்திற்கு ஏற்ப கோயில்களும் மாறி விட்டன. சில கோயில்களில் அட்டாச் பாத்ரூம்கள் கூட பக்தர்களின் வசதிக்காக உள்ளன.
காஸ்மிக் கதிர்களுக்கு வெட்ட வெளியில் போய் நின்றால் போதாது. வெட்ட வெளியில் பல விதமான கதிர்கள் இருக்கிறது, அந்த கதிர்கள் எல்லாம் உடலில் இறங்கினால் என்ன ஆவது. ஆகமவிதிப்படி கட்டப்பட்ட கோயில்களில் கலசத்தின் வழியாக கர்ப்பகிரகத்திற்குள் காஸ்மிக் கதிர்கள் வடிக்கட்டப்படுகிறதாக கூறுகிறது ஆகமவிதி. இவை அனைத்தும் பழங்கால கோவிலில் நடைபெறும் செயல்முறைகள்.
ஆகமமே இல்லை விதி எதுக்கு..
நமது கலாச்சாரத்திற்கே சம்பந்தமில்லாத புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு ஏன் கோயில்களை திறக்கிறீர்கள், ஆகமவிதியை மீறுகிறீர்கள் என பலரின் கேள்வியில் நியாயம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அவர்களுக்கு எதிர்சாரார் கேட்கும் எதிர்கேள்வி மட்டும் ஏன் காதில் விழவில்லை என தெரியவில்லை. "ஆகமவிதிப்படி எந்த மார்டன் கோயிலும் செயல்படுவதில்லை அப்புறம் எதற்கு ஆகம விதியை இழுக்கிறீர்கள்" என்பது தான் அந்த கேள்வி.
உண்மையில் ஆகமவிதியின் கீழ் கட்டப்பட்டுள்ள எந்த கோயிலும் புத்தாண்டு இரவு திறந்திருக்காது என்பது தான் உண்மை. அந்த கோயில்களைப் பொறுத்தவரை தினமும் புத்தாண்டு தான்.