திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் ஜெ.வுக்காக விதிகளை மீறி நள்ளிரவில் நடந்த பூஜையால் சர்ச்சை!
சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் நடை சாத்திய பிறகு நள்ளிரவு பூஜை நடத்தப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் முதல்வர் ஜெயலலிதாவுக்காக விதிகளை மீறி நள்ளிரவில் நடத்தப்பட்டதாக கூறப்படும் பூஜையால் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.
சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் வளாகம் மற்றும் சுற்று வட்டார பகுதிகள் நேற்று முன்தினம் இரவு மிகுந்த பரபரப்பாக காணப்பட்டது. அதிகாலை சுமார் 1 மணியளவில் TN 04-AM 5 என்ற எண் கொண்ட லேன்சர் கார், TN20-CU2277 என்ற எண் கொண்ட காரும் கோயில் முன் வந்து நின்றது.
அதில் இருந்து சிலர் இறங்கி நடை சாத்தப்பட்ட கோயிலை திறந்து உள்ளே சென்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த தீட்சிதர்கள் உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
சிக்கிய மர்ம நபர்
உடனே கோவிலுக்கு விரைந்த போலீசார் விசாரணை நடத்தி கொண்டிருந்தனர். அப்போது புரோகிதர் ஒருவருடன் வந்த நபரை தீட்சிதர்கள் போலீசிடம் ஒப்படைத்தனர். ஆனால் பின்னர்தான் போலீசாருக்கு விவரம் தெரிய அதிர்ச்சியில் உறைந்து போயினராம்.
ஜெ. ஆஸ்தான ஜோதிடர்
கோவிலுக்கு காரில் வந்து இறங்கியது சில மன்னார்குடி முக்கிய பிரமுகர்களும் ஜெயலலிதாவின் ஆஸ்தான ஜோதிடர் தேவாதியும்தானாம். அதாவது முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 22-ந் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
சசிகலா பூஜை
அன்றைய தினம் முதல் தமிழகம் மற்றும் உலகம் முழுவதும் உள்ள அதிமுக தொண்டர்கள் கோயில்கள், தேவாலாயங்கள், மசூதிகளில் சிறப்பு பிரார்த்தனைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல் ஜெயலலிதா நலமடைந்தால் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் சிறப்பு பூஜை நடத்துவதாக சசிகலா நடராஜன் வேண்டிகொண்டாராம். அந்த வேண்டுதலை நிறைவேற்றவும் காணிக்கைகள் செலுத்தவும்தான் தேவாதி சகிதமாக சசிகலாவுக்கு வேண்டிய பிரமுகர்கள் நள்ளிரவில் திருவல்லிகேணி கோவிலுக்கு வந்தனராம்.
ஆகம விதி மீறல் சர்ச்சை
இந்த நள்ளிரவு பூஜைக்கு வந்த கார்கள், நபர்கள் பற்றிய புகைப்படங்கள் வாட்ஸ் அப்பில் வைரலாக வலம் வருகின்றன. அதே நேரத்தில் ஆகம விதிகளை மீறி நடையை சாத்திய பிறகு நள்ளிரவில் கோவிலை திறந்தது பெரும் சர்ச்சையாகவும் வெடித்து வருகிறது.