கோயில் திருவிழாவில் வாங்கி சாப்பிட்ட அவல் பிரசாதத்தால் விபரீதம்... 2 பெண்கள் பலி!
கோவை அருகே கோயில் திருவிழாவில் விநியோகிக்கப்பட்ட அவல் பிரசாதத்தை உண்ட 2 பெண்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் முத்துமாரியம்மன் கோயிலில் அவல் பிரசாதம் வாங்கி சாப்பிட்ட 2 பெண்கள் உயிரிழந்துள்ளனர். நேற்று கோயில் திருவிழாவில் விநியோகம் செய்யப்பட்ட அவல் பிரசாதத்தை வாங்கி சாப்பிட்ட 50 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 2 பெண்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
கோவை, மேட்டுப்பாளையம் நாடார் காலனி ஸ்ரீ செல்வமுத்து மாரியம்மன் கோயிலில் நேற்று திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில், பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. சுவாமி தரிசனத்திற்கு வந்த மக்கள் பிரசாதத்தை வாங்கி சாப்பிட்டுள்ளனர்.
ஆனால் கோயிலில் வழங்கப்பட்ட அவல் பிரசாதம் பலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இரவு பிரசாதம் சாப்பிட்ட 2 குழந்தைகள் உள்ளிட்ட 50 பேருக்கு வாந்தி உள்ளிட்ட உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அவர்கள் அனைவரும் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் 60 வயது லோகநாயகி மற்றும் சாவித்ரி இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.