பாரம்பரிய உடைக்கு மாறிய கோவில் பணியாளர்கள்- முதல்கட்டமாக பக்தர்கள் விழிப்புணர்வுக்காம்!
சென்னை: தமிழக கோவில்களில் உடை கட்டுப்பாடுக்கு விழிப்புணர்வு அளிக்கும் வகையில் பாரம்பரிய உடைகளுக்கு மாறியுள்ளனர் கோவில் பணியாளர்கள்.
கோவில்களுக்கு வருகின்ற ஆண்கள் வேட்டி, பைஜாமா, சட்டை, சாதாரண பேண்ட் ஆகியவைதான் அணிய வேண்டும். பெண்கள் புடவை, பாவாடை தாவணி, சுடிதார் அதற்கு மேல் துண்டு போன்று மேலாடை ஆகியவற்றை அணிய வேண்டும். குழந்தைகள் முழு உடலை மறைக்கும் எந்த ஆடைகளையும் அணியலாம் என்று சென்னை ஹைகோர்ட் நீதிபதி எஸ்.வைத்தியநாதன் பிறப்பித்த தீர்ப்பில் கூறி உள்ளார்.
இதனை ஏற்று தமிழக இந்து அறநிலையத்துறை உயர் அதிகாரிகள், தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில் நிர்வாகங்களுக்கும் ஆடைக் கட்டுப்பாடு குறித்து ஒரு சுற்றறிக்கையை அனுப்பியது.
அதில், "கோவில் நுழைவு அங்கீகாரம் சட்டம் 1947, பிரிவு 4-ன்படி கோவில்களுக்கு வரும் பக்தர்கள் ஆடை கட்டுப்பாடை கடைப்பிடிக்க வேண்டும். ஒவ்வொரு கோவில்களுக்கும் இருக்கும் பாரம்பரிய கலாசாரப்படி அவை செயல்படுத்தப்பட வேண்டும். கோவில்களுக்கு செல்லும் முன்பு சில விதிமுறைகளை பக்தர்கள் கண்டிப்பாக கடைப்பிடிக்கும்படி அறிவுறுத்த வேண்டும்.
குளித்துவிட்டு சுத்தமான பாரம்பரிய ஆடைகளை அணிந்து கொண்டு வரவேண்டும். அத்துடன் ஒவ்வொரு கோவில்களுக்கும் ஒவ்வொரு கோட்பாடுகள் கடைப்பிடிக்கப்படுகிறது. 1 ஆம் தேதி முதல் முழுமையாக அவை நடைமுறைப்படுத்த அனைத்து பணியாளர்களும் ஒத்துழைப்பு நல்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக கோவில் பணியாளர்கள் பக்தர்களுக்கு விழிப்புணர்வு அளிக்கும் வகையில் வேட்டி, சட்டை அணிந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.