பயந்தது நடந்துவிட்டது.... தற்காலிக டிரைவர் ஓட்டிய பஸ் மோதி ஒருவர் பலி - 4 பேர் காயம்
விருதாச்சலம் அருகே தற்காலிக ஓட்டுனர் ஓட்டிய பேருந்து விபத்தில் சிக்கியதில் ஒருவர் பலியானார்.
கடலூர்: விருதாச்சலம் அருகே அரசு பேருந்தும், இருச்சக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் சம்பவ இடத்திலே ஒருவர் பலியானார், சிறுமி உள்பட இருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
போக்குவரத்து தொழிலாளர்களின் 4வது நாள் தொடர் வேலைநிறுத்தப்போராட்டத்தால் தமிழகம் முழுவதும் அரசு பேருந்துகள் இயங்காமல் முடங்கியுள்ள நிலை உருவாகியுள்ளது. பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு சார்பாக தற்காலிக நடத்துனர் மற்றும் ஓட்டுனர்கள் நியமிக்கப்பட்டு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இந்த தற்காலிக பணியில் மணல் லாரி ஓட்டுனர்கள், லாரி ஓட்டுனர்கள் உள்ளிட்டோரை அரசு நியமிப்பதாக போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களும், சமூக ஆர்வலர்களும் குற்றஞ்சாட்டி இருந்தனர். இந்நிலையில் இதனையெல்லாம் மறுத்த அரசு, மக்களின் வசதிக்காகவே இதனை செய்வதாக தெரிவித்தனர்.
இந்நிலையில் விருதாச்சலம் அருகே தற்காலிக ஓட்டுனர் ஓட்டிச் சென்ற பேருந்து இருசக்கர வாகனத்துடன் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் படுகாயமடைந்த சியான் என்ற நபர் சம்பவ இடத்திலே பலியானார். மேலும் இருசக்கர வாகனத்தில் வந்த சிறுமி சாராவும், சாமுவேல் என்பவரும் பலத்த காயத்துடன் அருகில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தற்காலிக ஓட்டுனர்களை மக்கள் வசதிக்காக நியமிப்பதாக கூறிய அரசு, மக்களின் உயிர்களுக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டிய நிலைக்கு தற்போது தள்ளப்பட்டுள்ளது. இதேநிலை நீடித்தால் மாநிலம் முழுவதும் பல விபத்துகள் ஏற்படும் என்றும் போக்குவரத்து தொழிலாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.