மக்கள் நீதி மய்யத்தின் உயர்நிலைக்குழு கலைப்பு.. கமல்ஹாசன் அதிரடி
மக்கள் நீதி மய்யத்தின் தற்காலிக உயர்நிலைக்குழு கலைக்கப்படுவதாக நடிகர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: மக்கள் நீதி மய்யத்தின் தற்காலிக உயர்நிலைக்குழு கலைக்கப்படுவதாக நடிகர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் நடிகர் கமல் தனது அரசியல் கட்சி பெயரை மக்கள் நீதி மய்யம் என்று அறிவித்தார். தொடர்ந்து கட்சிக் கொடியையும் அவர் அறிமுகம் செய்தார்.
மேலும் கட்சியின் உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் என நடிகை ஸ்ரீபிரியா, கமிலா நாசர் உள்ளிட்டோரின் பெயர்களை அறிவித்து அறிமுகம் செய்து வைத்தார். இந்நிலையில் நடிகர் கமல் இன்று தனது கட்சியின் உயர்நிலைக்குழுவை கலைத்துள்ளார்.
உயர்நிலைக்குழு கலைப்பு
சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள அலுவலகத்தில் நடிகர் கமல்ஹாசன் முதல் முறையாக கட்சிக்கொடியை ஏற்றிவைத்தார். இதைத்தொடர்ந்து பேசிய அவர் மக்கள் நீதி மய்யத்தின் தற்காலிக உயர்நிலைக்குழு கலைக்கப்படுவதாக கூறினார்.
செயற்குழு உறுப்பினர்களாக
உயர்நிலைக்குழுவில் இருந்தவர்கள் செயற்குழு உறுப்பினர்களாக செயல்படுவார்கள் என்றும் நடிகர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். உயர்நிலைக்குழுவில் இருந்து ஸ்ரீபிரியா, கமீலா நாசர், பாரதி கிருஷ்ணகுமார் உள்ளிட்ட 11 பேர் செயற்குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
துணைதலைவர் ஞானசம்பந்தன்
மேலும் மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகளையும் நடிகர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். அதன்படி மக்கள் நீதி மய்யத்தின் தலைவராக கமல்ஹாசன் செயல்படுவார் என்றும் துணைத் தலைவராக ஞானசம்பந்தன் இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுச்செயலாளர் அருணாச்சலம்
கட்சியின் பொருளாளராக சுரேஷ், பொதுச்செயலாளராக அருணாச்சலம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். சட்டசபை தொகுதி வாரியாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மன்னிப்பு கேட்ட கமல்
இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆழ்வார்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் உள்ள கமல்ஹாசன் அலுவலகம் முன் திரண்ட தொண்டர்களால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதற்கு கமல்ஹாசன் தனது பேச்சின் இடையே மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.