கடலில் தவித்த தமிழக மீனவர்கள் 18 நாட்களுக்கு பிறகு மீட்பு: மீட்டது யார் தெரியுமா ?
ஓகி புயலால் பாதிக்கப்பட்டு 18 நாட்களாக கடலில் தத்தளித்த தமிழக மீனவர்கள் 10 பேர் மீட்கப்பட்டு உள்ளனர்.
கன்னியாகுமரி : ஓகி புயலால் வழி மாறி போய் கடலில் தவித்த குமரி வல்லவிளையைச் சேர்ந்த 10 தமிழக மீனவர்கள் 18 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டு உள்ளனர்.
கடந்த மாதம் கன்னியாகுமரியில் ஏற்பட்ட ஓகி புயல் மாவட்டத்தையே புரட்டிப்போட்டது. இன்னமும் மக்கள் அந்த பாதிப்பில் இருந்து மீளமுடியாமல் தவித்து வருகிறார்கள்.
இதில் குமரி மாவட்டத்தின் கடலோர மீனவகிராமங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. கடலுக்கு மீன் பிடிக்கச்சென்ற மீனவர்கள் கரைக்கு திரும்பாததால், மீனவ கிராம மக்கள் கண்ணீரில் தத்தளித்தனர்.
மத்திய மாநில அரசுகள் மீட்புப்பணியில் ஈடுபடுவதாக சொல்லப்பட்டாலும், பல மீனவர்கள் கர்நாடகா, கோவா, குஜராத் மாநில கடற்கரைகளில் கரை ஒதுங்கிய நிலையிலும் இன்னமும் பல நூற்றுக்கணக்கான மீனவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.
புயல் பாதித்த கன்னியாகுமரியை 19 நாட்களுக்கு பிறகு பிரதமர் மோடி இன்று பார்வையிட வந்துள்ளார். இந்நிலையில், கடலில் கடந்த 18 நாட்களாக தத்தளித்துக்கொண்டிருந்த 10 தமிழக மீனவர்கள் உயிருடன் மீட்கப்பட்டு உள்ளனர். இந்த மீனவர்கள் அனைவரும் வல்லவிளை மீனவ கிராமத்தை சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது.
இவர்களை மீட்டது மத்திய மாநில அரசுகள் அல்ல; வல்லவிளை கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் குழு கடலில் தத்தளித்தவர்களை மீட்டு உள்ளது. மீனவர்கள் மீட்பில் அரசு கவனம் செலுத்தாததால், சில நாட்களுக்கு முன்பு அதே கிராமத்தை சேர்ந்தவர்கள் தங்கள் கிராம மீனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது மும்பையில் இருந்து 300 கடல் மைல் தொலைவில் படகில் தத்தளித்துக்கொண்டிருந்த 10 மீனவர்களை மீட்டு நேற்று கரைக்கு கொண்டுவந்தனர். இதனால் மீனவர்களின் உறவினர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். இதனிடையே ஓகி புயலால் காணாமல் போன மீனவர்களை மீட்க கோரிய ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையில் மத்திய, மாநில அரசுகள் டிசம்பர் 22ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.