ஓகியில் சிக்கி மும்பை அருகே கடலில் தத்தளித்த 47 தமிழக மீனவர்கள் 20 நாட்களுக்கு பிறகு மீட்பு!
ஓகி புயலால் பாதிக்கப்பட்டு 20 நாட்களாக கடலில் தத்தளித்த தமிழக மீனவர்கள் 47 பேர் மீட்கப்பட்டு உள்ளனர்.
கன்னியாகுமரி : ஓகி புயலால் வழி மாறி போய் கடலில் தவித்த கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 47 தமிழக மீனவர்கள் 20 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டு உள்ளனர்.
கடந்த மாதம் கன்னியாகுமரியில் ஏற்பட்ட ஓகி புயல் மாவட்டத்தையே புரட்டிப்போட்டது. இன்னமும் மக்கள் அந்த பாதிப்பில் இருந்து மீளமுடியாமல் தவித்து வருகிறார்கள்.
இதில் குமரி மாவட்டத்தின் கடலோர மீனவகிராமங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. கடலுக்கு மீன் பிடிக்கச்சென்ற மீனவர்கள் கரைக்கு திரும்பாததால், மீனவ கிராம மக்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். காணாமல் போன தங்களது உறவினர்கள் மீண்டும் வருவார்களா என்று மிகுந்த வருத்தத்தில் உள்ளனர்.
மத்திய மாநில அரசுகள் மீட்புப்பணியில் ஈடுபடுவதாக சொல்லப்பட்டாலும், பல மீனவர்கள் கர்நாடகா, கோவா, குஜராத் மாநில கடற்கரைகளில் கரை ஒதுங்கிய நிலையிலும் இன்னமும் பல நூற்றுக்கணக்கான மீனவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. இரண்டு நாட்களுக்கு முன்னதாக குமரி வந்திருந்த பிரதமர் மோடி, தமிழக முதல்வர் பழனிசாமி ஆகியோர் கடைசி மீனவர் மீட்கும் வரை தேடுதல் பணி தொடரும் என்று உறுதி அளித்து சென்றுள்ளனர்.
ஆனால், மத்திய மாநில அரசுகளின் மீட்பு பணியில் தொடர்ந்து சுணக்கமே ஏற்பட்டு உள்ளது. அவர்கள் தெரிவித்த தகவல்களும் மீனவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும்படியாக இல்லை. மீனவர்கள் மீட்பில் அரசு கவனம் செலுத்தாததால், சில நாட்களுக்கு முன்பு மீனவ கிராமத்தை சேர்ந்தவர்கள் தங்கள் கிராம மீனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். அதே போல பல கிராமங்களில் இருந்தும் மீனவர்கள் கிளம்பிச் சென்றனர்.
இந்நிலையில், மும்பையில் இருந்து 300 மைல் தொலைவில் கடலில் கடந்த 20 நாட்களாக தத்தளித்துக்கொண்டிருந்த 47 தமிழக மீனவர்கள் உயிருடன் மீட்கப்பட்டு உள்ளனர். இவர்கள் அனைவரும் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இதனால், மீனவ கிராமங்களை சேர்ந்த மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். இதேபோல, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வல்லவிளையைச் சேர்ந்த 10 தமிழக மீனவர்களை அவர்கள் உறவினர்களே மீட்டு வந்தனர்.