சிறுமி பலாத்காரம்: வாலிபருக்கு 10 ஆண்டு சிறை... புதிய சட்டத்தின் கீழ் முதல் தீர்ப்பு
திருச்சி: ஏழு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு புதிய சட்டத்தின் கீழ் 10 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து திருச்சி மகளிர் நீதிமன்றம் தீர்ப்புளித்துள்ளது.
திருச்சி காஜாப்பேட்டை பசுமடம் ஆதிமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த உலகநாதன் என்ற 26 வயதுவாலிபர், அதே பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமியை கடந்த ஆண்டு பாலியல் பலாத்காரம் செய்தார். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் உலகநாதனை போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை திருச்சி மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில், உலக நாதன் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மகளிர் நீதிமன்ற நீதிபதி (பொறுப்பு) ஏ.கே.ரகுமான், உலகநாதனுக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து தீர்பளித்துள்ளார்.
இந்த வழக்கு, குழந்தைகளை பாலியல் வன்கொடுமையில் இருந்து பாதுகாக்கும் சட்டம் 2012-ன் படி திருச்சி மாநகரில் முதல் வழக்காக பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.