உதயமானது தென்காசி மாவட்டம்.. கோலாகல விழா.. தொடங்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
தமிழகத்தின் புதிய மாவட்டமாக தென்காசி உருவாகி உள்ளது
Recommended Video
தென்காசி: மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே, தமிழகத்தின் 33-வது மாவட்டமாக தென்காசி உதயமாகி உள்ளது.. இந்த புதிய மாவட்டத்தையும், அதன் நிர்வாக பணிகளையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று துவக்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்.
தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களை பிரித்து புதிய மாவட்டங்களாக மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தென்காசி, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் ஏற்கனவே உதயமாகி உள்ளன.
இதில் திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து தென்காசி தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டுள்ளது. தென்காசியை தலைமையிடமாக கொண்டு 33வது புதிய மாவட்டம் அமைகிறது. அதாவது தென்காசி, சங்கரன்கோவில் இரு வருவாய் கோட்டங்களுடன், 8 தாலுகாக்களுடன் இந்த புதிய மாவட்டம் உருவாகிறது.
அரசாணை
தமிழக முதல்வர் இது சம்பந்தமாக ஏற்கனவே 110 விதியின் கீழ் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு தென்காசி பகுதி மக்களை ஏகப்பட்ட மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.. நல்ல வரவேற்பும் கிடைத்தது. இதையடுத்து, அதற்கான அரசாணையையும் வெளியிட்டு, தனி அதிகாரியையும் நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.
8 தாலுக்காக்கள்
தென்காசி, சங்கரன்கோவில் இரு வருவாய் கோட்டங்கள், 5 சட்டசபை தொகுதிகள், 8 தாலுக்காக்கள் அதாவது, தென்காசி, சங்கரன்கோவில், சிவகிரி, ஆலங்குளம், திருவேங்கடம், கடையநல்லூர், செங்கோட்டை, வி.கே.புதூர் ஆகிய 8 தாலுகாக்கள் இந்த மாவட்டத்தில் அடங்கும்.
கோலாகல விழா
இப்படி, புதிய மாவட்டத்திற்கான எல்லை வரையறை தீவிரமாகவும், செவ்வனே முடிந்த நிலையில், இன்று அம்மாவட்டத்திற்கான துவக்க விழா தற்போது நடைபெற்று வருகிறது. தென்காசியில் ஆசாத்நகரை அடுத்துள்ள இசக்கி மகால் வளாகத்தில் இந்த விழா வெகு சிறப்பாக நடந்து வருகிறது. முதல்வர் பழனிசாமி இதனை துவக்கி வைத்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
பங்கேற்பு
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள், உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். ஏற்கனவே இந்த புதிய மாவட்டத்திற்கு கலெக்டராக ஜி.கே.அருண் சுந்தர் தயாளன் மற்றும் எஸ்பி சுகுணாசிங் உள்ளிட்டோரை தமிழக அரசின் தலைமை செயலாளர் நியமித்து உத்தரவிட்டிருந்தார். இவர்களும் இந்த நிகழ்ச்சியில் உற்சாகத்துடன் கலந்து கொண்டுள்ளனர். இதைத்தவிர பொதுமக்களும் புடைசூழ பங்கேற்றுள்ளதால் தென்காசியே இன்று விழாக்கோலம் பூண்டுள்ளது.. தங்களின் புதிய மாவட்ட குழந்தையை உளமார்ந்த மகிழ்ச்சி, பூரிப்புடன் வரவேற்று வருகின்றனர்.