தென்காசி, செங்கல்பட்டு.. உதயமானது மேலும் 2 மாவட்டங்கள்.. முதல்வர் எடப்பாடி அறிவிப்பு
Recommended Video
சென்னை: நெல்லை மாவட்டத்தில் உள்ள தென்காசியை தனி மாவட்டமாக அறிவித்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அதேபோல செங்கல்பட்டும் தனி மாவட்டமாக உருவாகியுள்ளது.
நீண்ட நாட்களாக தென்காசியை தனி மாவட்டமாக பிரிக்கக் கோரி கோரிக்கை வைத்து வந்த நிலையில், இது தொடர்பாக வருவாய் துறை உயர் அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசித்துள்ளார். அவர்களும் நெல்லை மாவட்ட பரப்பளவு உள்ளிட்ட சில விவரங்களை முதல்வருக்கு எடுத்துக் கூறினர்.
இதையடுத்து நிர்வாக வசதிக்காக தென்காசியை தனி மாவட்டமாக்கலாம் என முடிவெடுக்கப்பட்டது. இந்த நிலையில் அதற்கான அறிவிப்பை சட்டப்பேரவையில் முதல்வர் இன்று வெளியிட்டார். விதி எண் 110ன் கீழ் இதற்கான அறிவிப்பை முதல்வர் வெளியிட்டார்.
தென்காசி தற்போது முதல் நிலை நகராட்சியாக உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையோரம் இயற்கை எழில் சூழும் நகரமாக உள்ள தென்காசிக்கு சுற்றுலாப் பயணிகளின் வரத்தும் அதிகமாக உள்ளது. அருகாமையில் குற்றாலம் உள்ளதால் எப்போதும் பரபரப்பான ஊராக இருந்து வருகிறது தென்காசி.
மேலும், தென்காசியை மாவட்டமாக்கினால் அதன் கீழ் சிவகிரி, அம்பாசமுத்திரம்,கடையநல்லூர், செங்கோட்டை ஆகிய வட்டாரங்கள் வரும். ஏற்கனவே கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக அறிவித்தார் முதல்வர். அறிவிப்போடு நின்றுவிட்டது அதற்கு பிறகு விழுப்புரம் மாவட்டத்தை பிரிப்பதற்கான எந்த பணிகளையும் வருவாய் துறை மேற்கொள்ளவில்லை. அதேபோல் தென்காசியையும் அறிவிப்போடு விட்டு விடக் கூடாது என்பது அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பு.
அதேபோல, காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து செங்கல்பட்டை தனியாகப் பிரித்து மாவட்டமாக அறிவித்துள்ளார் முதல்வர். ஏற்கனவே செங்கல்பட்டு எம்ஜிஆர் மாவட்டம் என்று இது இருந்தது. இதற்குள் காஞ்சிபுரம் வந்தது. பின்னர் இதை மாற்றி காஞ்சிபுரம் மாவட்டமாக மாற்றப்பட்டது நினைவிருக்கலாம்.
இந்த நிலையில் கும்பகோணத்தையும் பிரித்து தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதுதொடர்பாக அரசுக்குக் கோரிக்கை வந்துள்ளதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்பி உதயக்குமார் சட்டசபையில் இன்று தெரிவித்தார்.
தற்போது உருவாக்கப்பட்டுள்ள 2 மாவட்டங்களையும் சேர்த்தால் தமிழகத்தில் உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.