தென்றல் தவழும் தென்காசி! கட்டுக்கட்டாக குவிந்த புகார்கள்! திமுக மா.செ.க்கு அரணாக நின்ற அமைச்சர்!
தென்காசி: தென்காசி மாவட்ட திமுகவில் நிலவி வரும் உச்சக்கட்ட குழப்பத்தால் நீள இன்ஷியல் கொண்ட பொறுப்பு அமைச்சர் மீது கட்சியின் தலைமை கடும் அதிருப்தியில் இருந்து வருகிறது.
காதும் காதும் வைத்தது போல் பேசி முடிக்க வேண்டிய விவகாரத்தை மாவட்ட பொறுப்பு அமைச்சரின் பொறுப்பற்ற நடவடிக்கையால் நீதிமன்றம் வரை போயிருக்கிறது திமுக உட்கட்சி விவகாரம்.
இது ஒரு பக்கம் என்றால் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் மீது கட்டுக்கட்டாக புகார்கள் அனுப்பியவர்கள் இப்போது அந்த நீள இன்ஷியல் அமைச்சர் மீது தங்களது அதிருப்தியை வெளிப்படுத்த ஆரம்பித்துள்ளார்கள்.
டிராமா.. ஓசியில் வரமாட்டேன்னு மூதாட்டி அடம்பிடித்த வீடியோ பின்னணியில் அதிமுக புள்ளி.. திமுக விளாசல்
தென்காசி மாவட்டம்
தென்காசி மாவட்ட திமுகவில் நாளுக்கு நாள் கோஷ்டிப்பூசல் அதிகரித்து வருவதால் அதற்கு தீர்வு வழங்க வேண்டிய நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது திமுக தலைமை. தென்காசி மாவட்ட திமுகவை பொறுத்தவரை வடக்கு, தெற்கு என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக சிவபத்மநாதனும் வடக்கு மாவட்டச் செயலாளராக செல்லத்துரை என்பவரும் இருக்கிறார்கள்.
தனுஷ்குமார் எம்.பி.
இதில் தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் பதவிக்கு தனுஷ்குமார் எம்.பி.யை கட்சித் தலைமை முன்னிறுத்திய நிலையில், அதற்கு சிட்டிங் மாவட்டச் செயலாளர் செல்லத்துரை தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இன்னும் சொல்லப்போனால் நீதிமன்றத்தில் வழக்கு கூட தொடர்ந்து கட்சித் தலைமைக்கே செல்லத்துரை தரப்பு அதிர்ச்சி அளித்தது. நிலைமை இவ்வளவு தூரம் மோசமாக செல்லும் என எதிர்பார்க்காத தலைமை அந்த நீள இன்ஷியல் கொண்ட பொறுப்பு அமைச்சர் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறது.
ஆடுபுலி ஆட்டம்
தலைமையின் அதிருப்தி ஒரு பக்கம் என்றால் தென்காசி தெற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் பலரும் அந்த அமைச்சர் மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள். காரணம் தாங்கள் கட்டுக்கட்டாக சிவபத்மநாதன் பற்றி புகார் ஓலைகள் அனுப்பியும் அவருக்கு அமைச்சர் அரணாக நின்றார் என்பதேயாகும். இதனால் தென்றல் தவழும் தென்காசி மாவட்டத்தில் அனல் பறக்கும் அரசியல் ஆடுபுலி ஆட்டம் அரங்கேறிவருகிறது.
இன்ஷியல் அமைச்சர்
தமிழகம் முழுவதும் எல்லா மாவட்டங்களுக்கு மாவட்டச் செயலாளர்களை அறிவித்த திமுக தலைமையால் தென்காசி வடக்கு மாவட்ட திமுகவுக்கு மட்டும் மாவட்டச் செயலாளரை அறிவிக்க முடியவில்லை. ஆரம்பத்திலேயே பேசி முடிக்க வேண்டிய விவகாரத்தை விஸ்வரூபம் எடுக்க வைத்த அமைச்சர் இப்போது கூடுதலாக அவமரியாதை சர்ச்சை ஒன்றிலும் சிக்கியிருக்கிறார்.