தென்காசி சுற்று வட்டாரப் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை
நெல்லை: தமிழகம் முழுவதும் அக்னி நட்சத்திரம் கொளுத்தி வரும் நிலையில் தென்காசி, செங்கோட்டை பகுதியில் நேற்று மாலை இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் அப்பகுதிகளில் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.
தமிழகம் முழுவதும் வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பாதிக்கப்பட்டு வருகின்றனர். நெல்லை மாவட்டத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே கடுமையான வெயில் கொளுத்தியது. இதன் காரணமாக மக்கள் வீடுகளுக்குள் முடங்கிய நிலையில் இருந்தனர்.
இந்நிலையில் தென்காசி, குற்றாலம், செங்கோட்டை, புளியரை உள்ளிட்ட சுற்று வட்டராப் பகுதிகளில் நேற்று மாலையில் வானம் தீடீர் என கறுத்து சாரல் மழை பெய்யத் தொடங்கியது. பின்னர் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்யத் தொடங்கியது. சுமார் 1 மணி நேரம் நீடித்தது.
இந்த மழையின் காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் அனல் காற்றின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான நிலை நீடித்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.